தமிழில் உயர் நீதிமன்ற தீர்ப்பு : வழக்கறிஞர்கள் சங்கம் சொல்வது என்ன?

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தொடர்பான வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழில் தீர்ப்பு வழங்கியுள்ளது வழக்கறிஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே தீர்ப்புகள் வெளியாகின்றன. நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் வாதாடுவதில் தமிழ் மொழியைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் வழக்கறிஞர் சங்கங்கள் கோரிக்கையை வைத்து வருகின்றன.
இந்தக் கோரிக்கைகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நிலையில், 'தீர்ப்புகளை தமிழில் வெளியிட வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்து வழக்கறிஞர்களும் போராடி வந்தனர்.
இந்தநிலையில், கரூரைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், 'மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவின்போது வேத மந்திரங்களை சம்ஸ்கிருத மொழிக்கு இணையாக தமிழிலும் பயன்படுத்த உத்தரவிட வேண்டும்' எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. 'சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழுக்கு சிறப்பு செய்யும் வகையில் மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவின்போது தமிழுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும்' எனக் கூறினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு தேதி இறுதி செய்யப்படவில்லை எனக் கூறிய நீதிபதி, 'கோவில் குடமுழுக்கு தமிழில் ஓதுவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஜூன் 2 ஆம் தேதியன்று அரசுத் தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பை அவர் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வழங்கியுள்ளார். இதனை வரவேற்றுள்ள வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து மூத்த வழக்கறிஞர் சத்திய சந்திரனிடம் பிபிசி தமிழ் பேசியது. "உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் வெளியிடப்படும் என இந்திய அரசு அறிவித்திருந்தது. 2019-ஆம் ஆண்டு சரவணபவன் ராஜகோபால் சரணடைய விலக்கு கோரிய வழக்கின் தீர்ப்பு முதல்முறையாக தமிழில் வெளியிடப்பட்டது" என்கிறார்.
அந்தவகையில், உயர் நீதிமன்றத்தில் முதல்முறையாக தமிழில் தீர்ப்பை வெளியிட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று எனவும் அவர் தெரிவித்தார்.
"நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்வதற்கு இதுபோன்ற முயற்சிகள் பலன் அளிக்கும். வாதாடுவதும் தமிழில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. அது அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டால் மட்டுமே சாத்தியம்," என்கிறார் சத்தியசந்திரன்.
"தமிழில் வாதாடுவது மட்டுமல்ல. சட்ட சொற்களும் அதிகளவு தமிழில் வெளிவர வேண்டும்" எனக் கூறுகிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தமிழில் சட்ட சொற்களைக் கொண்டு வருவது தொடர்பான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இதில் நீதித்துறைக்கு எந்தவித பங்கும் கிடையாது" எனக் கூறுகிறார்.
"தீர்ப்புகள் அதிகளவில் தமிழ் மொழியில் வெளியில் வரவேண்டும். அதற்கு மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பு முன்மாதிரியாக உள்ளது" என அவர் தெரிவித்தார்.




















