நேரலை, "போர் முடிந்துவிட்டது. ஆனால்..." - இரான் பற்றி டிரம்ப் கூறியது என்ன?

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இரான் போரால் சௌதி அரேபியாவில் மதுபான தட்டுப்பாடு

    சௌதி அரேபியா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சௌதி அரேபியாவில் மதுபானம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இரானில் நடைபெற்று வரும் போர் சௌதி அரேபியாவில் மதுபான விநியோகத்தைப் பாதித்துள்ளது.

    பிபிசி பாரசீக மொழி சேவையின்படி, சௌதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள ராஜாங்க குடியிருப்பு பகுதியில் அரசு மதுபானக் கடை ஒன்று உள்ளது.

    ராய்டர்ஸில் வெளியான செய்தியின்படி, மதுபான கடைக்குச் சென்ற 5 பேர் அலமாரிகள் காலியாக இருந்ததாகவும் விலை உயர்ந்த மற்றும் பிரபலமில்லாத பிராண்ட் மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

    எந்தப் பெயரும் இலச்சினையும் இல்லாத அந்தக் கடை முஸ்லிம் அல்லாத ராஜதந்திரிகளுக்காக 2024-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு முஸ்லிம் அல்லாத பணக்கார வெளிநாட்டினருக்கும் திறக்கப்பட்டது.

    சௌதி அரேபியாவில் 1952-ஆம் ஆண்டிலிருந்து மதுபானம் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் வெளிநாட்டு பணியாளர்களை ஈர்க்க உரிமம் அடிப்படையில் செயல்படும் மதுபானக் கடைகளுக்கு குறிப்பிட்ட அளவிலான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  2. ஜெர்மனியில் இருந்து 5,000 படை வீரர்கள் வாபஸ் - அமெரிக்கா முடிவு

    அமெரிக்கா, ஜெர்மனி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    ஜெர்மனியிலிருந்து 5,000 படை வீரர்களை திரும்பப் பெற இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இரான் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜெர்மன் சான்சலர் ஃப்ரெட்ரிச் மெர்ட்ஸ் இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதலுக்கு நடுவே இந்த முடிவு வந்துள்ளது.

    "மெர்ட்ஸ் மோசமாக வேலை செய்து வருகிறார். அவருக்கு குடிவரவு மற்றும் எரிவாயு உட்பட அனைத்து விதமான பிரச்னைகளும் உள்ளன," என்று டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பதிவில் தெரிவித்திருந்தார்.

    இத்தாலி மற்றும் ஸ்பெயினிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறப் போவதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின்படி 36,000-க்கும் அதிகமான அமெரிக்க வீரர்கள் ஜெர்மனியில் உள்ளனர்.

    இது தொடர்பாக பென்டகன் செய்தி தொடர்பாளர் சான் பார்னெல், "ஐரோப்பாவில் உள்ள ராணுவ நிலையைப் பற்றி ஆழமான மறுஆய்விற்குப் பிறகு அங்குள்ள சூழ்நிலைகள் மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீரர்கள் அமெரிக்காவிற்குத் திரும்புவது அடுத்த 6-இல் இருந்து 12 மாதங்களுக்குள் நடக்கும்." என்றார்.

  3. சிலிண்டர் விலை உயர்வு பற்றி மத்திய அமைச்சர் கூறியது என்ன?

    வணிக சிலிண்டர் விலை உயர்வு

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒரு சர்வதேச பிரச்னை என பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வு பற்றி பேசிய மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அது ஒரு 'சர்வதேச பிரச்னை' எனத் தெரிவித்துள்ளார்.

    வெள்ளிக்கிழமை வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.993 அதிகரிக்கப்பட்டது. எனினும் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    விலை உயர்வுக்குப் பிறகு ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய பிரஹலாத் ஜோஷி, "நமது திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்.பி.ஜி) தேவையில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக இறக்குமதியைச் சார்ந்தே இருக்கிறோம். சிரமங்களுக்கு மத்தியிலும் மோரித அரசு பெட்ரோல், டீசல் மற்றும் உள்ளூர் எல்.பி.ஜி மற்றும் எல்.என்.ஜி விலைகளைக் கட்டுக்குள் வைத்துள்ளது." எனத் தெரிவித்தார்.

    நிறுவனங்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்து வருவதால் இது நடக்கக்கூடிய ஒன்று தான் எனக் கூறிய அவர் அதனால் தான் விலை உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

    வணிக சிலிண்டர் விலை உயர்வை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "முதல் தாக்குதல் எரிவாயு மீது, அடுத்த தாக்குதல் பெட்ரோல்-டீசல் மீது தான்." எனப் பதிவிட்டுள்ளார்.

  4. 'பொருளாதார போராட்டம்' - மொஜ்தபா காமனெயி அறிக்கை

    இரான், மொஜ்தபா காமனெயி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மொஜ்தபா காமனெயி தெரிவித்துள்ளார்.

    இரான் மக்கள் "பொருளாதார போராட்டத்தில்" ஈடுபடுமாறு அந்நாட்டின் அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

    அந்த அறிக்கையில், "ராணுவ மோதலில் தனது சிறப்பு வலிமையை இரான் காட்டியது. தற்போது பொருளாதாரம் மற்றும் கலாசார முனைகளிலும் எதிரிகளைத் தோற்கடிக்க வேண்டும்." என்று அவர் கூறியுள்ளார்.

    உள்ளுர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    "தற்போது நெருக்கடியைச் சந்திக்கும் வணிகர்கள் பணியாளர்களை வேலைகளிலிருந்து நீக்க முயற்சிக்கக்கூடாது," என்றும் தெரிவித்தார்.

    அதிஉயர் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து மொஜ்தபா காமனெயி கேமராவில் தோன்றவோ அல்லது பொதுமக்களுக்கு உரையாற்றவோ இல்லை. எனினும் பல சந்தர்ப்பங்களில் அவரின் அறிக்கைகள் இரான் அரசு ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டு வருகின்றன.

  5. "போர் முடிந்துவிட்டது. ஆனால்..." - இரான் பற்றி டிரம்ப் கூறியது என்ன?

    இரான், அமெரிக்கா, டிரம்ப்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    இரான் அணு ஆயுதங்கள் பெற அனுமதிக்கப்படக்கூடாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

    1973-ஆம் ஆண்டின் அமெரிக்க போர் அதிகாரச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அதிபரால் 60 நாட்கள் வரை ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

    அதன்பிறகு அந்த நடவடிக்கையை நிறுத்த வேண்டும் அல்லது நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும். மேலும் அந்தச் சூழ்நிலைக்கு அவசர ராணுவ பாதுகாப்பு தேவைப்பட்டால் கூடுதல் 30 நாட்கள் கோரலாம்.

    ஆனால் இந்தப் போரை தொடர்வதற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுமதி தேவையில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    "பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய போர் தற்போது முடிவடைந்துவிட்டது. ஆனால் இரான் உடனான மோதலை அமெரிக்கா விரைவில் முடித்துவிடாது. ஏனெனில் அப்படிச் செய்தால் சில ஆண்டுகள் கழித்து இதே பிரச்னையை மீண்டும் சந்திக்க நேரிடலாம்," என்றார்.

    உலகிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அனைத்து ஆயுதங்கள், முதன்மையாக அணு ஆயுதங்களை ஒழிக்க அமெரிக்கா முயற்சிக்கும் என்று டிரம்ப் கூறினார்.

    இரானின் அணுசக்தி திட்டத்தை இலக்கு வைப்பது ஒரு "முக்கியமான நகர்வு" எனக் குறிப்பிட்ட அவர் அது மேற்கொள்ளப்படவில்லை என்றால் "இரான் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கின் இதர பகுதிகளையும் அழிக்கும்." எனத் தெரிவித்தார்.

    அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே போர்நிறுத்தம் இருந்து வரும் நிலையில் பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

  6. மேற்கு வங்கத்தில் சில வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

    மேற்கு வங்கம்

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, மேற்கு வங்கத்தில் குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மேற்கு வங்கத்தில் 15 வாக்குச் சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 29-ஆம் தேதி இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது.

    ஆனால் ஈவிஎம் குளறுபடி மற்றும் மோதல்கள் தொடர்பான புகார்களால் இந்த வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்திருந்தது.

    இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் 11 வாக்குச்சாவடுகள் மக்ரஹாத் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 4 வாக்குச்சாவடிகள் டைமன்ட் துறைமுகம் தொகுதியிலும் அமைந்துள்ளன.

    பிடிஐ செய்தி முகமையின்படி, மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், மாநில தேர்தல் அமைப்பிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மறுவாக்குப்பதிவு நடத்துவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  7. வணக்கம் நேயர்களே!

    நேரலைப் பக்கத்தில் இன்று (02-05-2026) பிற்பகல் வரையிலும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை சுருக்கமாக தருவது மோகன்.

  8. அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை - புதிய நிபந்தனைகளை விதித்த இரான்

    இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் (கோப்புப் படம்)

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் (கோப்புப் படம்)

    அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய நிபந்தனைகளை பாகிஸ்தானிடம் இரான் வழங்கியுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார்.

    ஐஆர்என்ஏ (IRNA) செய்தி முகமையின்படி, இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தானிடம் இந்த நிபந்தனைகள் வியாழக்கிழமை மாலை (ஏப்ரல் 30) வழங்கப்பட்டுள்ளன.

    வியாழக்கிழமை மாலை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகாயி, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் இரானின் முன்னுரிமை போரை நிறுத்துவதும், நிலையான அமைதியை அடைவதுமே என்று வலியுறுத்தினார்.

    இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் அதிகாரப்பூர்வ மத்தியஸ்தராக இருப்பதாக பாகாயி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

    பல நாடுகள் மத்தியஸ்தராகச் செயல்படத் தயாராக இருந்தாலும், பாகிஸ்தான் மட்டுமே அதிகாரப்பூர்வமான மத்தியஸ்தர் என்பதையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

  9. மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் மீண்டும் தேர்தல்

    வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் செல்லும் தேர்தல் அலுவலர்கள் ( கோப்புப்படம் )

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் செல்லும் தேர்தல் அலுவலர்கள் ( கோப்புப்படம் )

    மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை (மே 2) அன்று 15 வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

    இதில் மகராகாட் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 11 வாக்குச்சாவடிகளும், டைமண்ட் ஹார்பர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 4 வாக்குச்சாவடிகளும் அடங்கும்.

    இந்த வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    குறிப்பிட்ட இந்த வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடந்ததாகத் தேர்தல் ஆணையத்திற்குப் புகார்கள் வந்ததன் அடிப்படையில் அங்கு மீண்டும் தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

  10. வணிக சிலிண்டர் விலை உயர்வு - ராகுல் காந்தி விமர்சனம்

    வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் 993 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் 993 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மீண்டும் ஒருமுறை உயர்ந்துள்ளது.

    ஏஎன்ஐ செய்தி முகமையின்படி, 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 993 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் டெல்லியில் 19 கிலோ சிலிண்டரின் விலை தற்போது 3,071.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.

    அதேசமயம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    விலை உயர்விற்குப் பிறகு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள ராகுல் காந்தி, “முதல் தாக்குதல் எரிவாயு மீது, அடுத்த தாக்குதல் பெட்ரோல் - டீசல் மீது” என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும் அவர் தனது பதிவில், “தேர்தலுக்குப் பிறகு விலைவாசி உயர்வு எனும் வெப்பம் வரும் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். இன்று வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் 993 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு இதுவாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

  11. 18 வயது வீரரை அணியில் சேர்த்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

    ஆல்ரவுண்டர் ஆர்.எஸ். அம்பரீஷ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைந்துள்ளார்.

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ஐசிசி ஆண்கள் யு-19 உலகக்கோப்பை 2026 தொடரை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் ஆர்.எஸ். அம்பரீஷ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைந்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஷிவம் மாவிக்கு பதிலாக ஆர்.எஸ். அம்பரீஷைத் தனது அணியில் சேர்த்துள்ளது.

    இந்தியன் பிரீமியர் லீக் 2026 தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக, ஷிவம் மாவிக்குப் பதிலாக ஆர்.எஸ். அம்பரீஷை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தேர்வு செய்துள்ளது.

    வலது கை மிதவேகப் பந்துவீச்சாளரான மாவி, இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகியுள்ளார்.

    ஆல்ரவுண்டர் ஆர்.எஸ். அம்பரீஷ், ஐசிசி ஆண்கள் யு-19 உலகக்கோப்பை 2026-ஐ வென்ற இந்திய யு-19 அணியின் ஒரு பகுதியாக இருந்தவர்.

    இந்தத் தொடரில் இந்திய யு-19 அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். இவர் மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

    வலது கை மிதவேகப் பந்துவீச்சாளராகவும், இடது கை பேட்டராகவும் செயல்படும் அம்பரீஷை, 30 லட்சம் ரூபாய்க்கு ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

  12. மும்பையில் கோக்கைன் பறிமுதல் - அமித்ஷா

    மும்பையில் 349 கிலோ உயர்தர கோகைனை என்சிபி பறிமுதல் செய்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார் (கோப்புப் படம்)

    பட மூலாதாரம், Sonu Mehta/Hindustan Times via Getty Images

    படக்குறிப்பு, மும்பையில் 349 கிலோ உயர்தர கோகைனை என்சிபி பறிமுதல் செய்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார் (கோப்புப் படம்)

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) ஒரு பெரிய சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பைக் கண்டறிந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

    மும்பையில் 1,745 கோடி ரூபாய் மதிப்பிலான 349 கிலோ உயர்தர கோகைனை என்சிபி பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, "போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை ஒடுக்க நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

    "போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் மும்பையில் ஒரு பெரிய சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுத்து, 349 கிலோ உயர்தர கோகைனைப் பறிமுதல் செய்துள்ளது. இதன் மதிப்பு 1,745 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  13. ஆப்பிரிக்காவில் ஒரு நாட்டைத் தவிர மற்ற அனைத்துக்கும் வரிகளை நீக்கிய சீனா

    ஆப்பிரிக்காவில் ஒரு நாட்டைத் தவிர மற்ற அனைத்துக்கும் வரிகளை நீக்கிய சீனா

    பட மூலாதாரம், Getty Images

    வெள்ளிக்கிழமை முதல் அனைத்து ஆப்பிரிக்க நாடுகளுக்கும் சீனா சுங்க வரிகளை நீக்குகிறது. ஆனால் தைவானுடன் உறவைத் தொடர்ந்து வைத்திருக்கும் எஸ்வாத்தினிக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்படவில்லை.

    கடந்த 2024 டிசம்பர் மாதத்திலேயே, குறைந்த வளர்ச்சியடைந்த 33 ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா வரி இல்லா கொள்கையை அமல்படுத்தியிருந்தது. தற்போது இந்த கொள்கை 53 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த சலுகை 2028 ஏப்ரல் 30 வரை அமலில் இருக்கும். அதன் பிறகு என்ன நடக்கும் என்பது தெளிவாக இல்லை.

    ஆப்பிரிக்க நாடுகளுக்கு முழுமையான சுங்கவரி விலக்கு வழங்கிய முதல் பெரிய பொருளாதார நாடு தாங்கள்தான் என சீனா கூறியுள்ளது.

  14. வணக்கம் நேயர்களே!

    நேரலைப் பக்கத்தில் இன்று இரவு வரையிலும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை சுருக்கமாக தருவது நந்தகுமார்

  15. இரானில் தூக்கிலிடப்பட்ட 21 வயது இளைஞர்

    இரான்

    பட மூலாதாரம், UGC

    பிபிசி நியூஸ் பெர்சியன் தகவலின்படி, இரானின் இஸ்பஹானைச் சேர்ந்த 21 வயதான சசன் ஆசாத்வர் ஜோங்கானி தூக்கிலிடப்பட்டார்.

    இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட அவர், இஸ்பஹானின் தஸ்த்கார்ட் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

    அவரது குடும்பத்திற்கு நெருக்கமான ஒரு வட்டாரம், மனித உரிமைகள் இணையதளமான HRANA-விடம், அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை மதியம் ஒரு 'பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில்' நடைபெற்றதாகவும், அதில் "அவரது 10 உறவினர்கள் மட்டுமே" கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியது.

    இரானிய இஸ்லாமியக் குடியரசின் நீதித்துறை, அரசாங்கத்தை "கவிழ்க்கும்" நோக்கில் ஜனவரி மாதம் நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது, சசன் ஆசாத்வர் ஜோங்கானி "அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஒரு மினிபஸ் மீது கற்கள் மற்றும் குச்சிகளால் தாக்குதல் நடத்தி, வாகனத்தின் ஜன்னல்களை உடைத்து, அதிகாரிகள் மீது கற்களையும் செங்கற்களையும் வீசினார்" என்று கூறுகிறது.

    இரானிய நீதித்துறையின்படி, பேரணிகளில் கலந்துகொள்வதற்கு முன்பு, ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் வீதிகளில் இறங்கப்போவதாக தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் கூறியதாகவும், மேலும் தனது நண்பர்களையும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளுமாறு "அழைத்திருந்ததாகவும்" அவர் ஒப்புக்கொண்டார்.

    ஆசாத்வார் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலைமைகள், அவருக்கு வழக்கறிஞரை அணுகுவதற்கான அனுமதி, மற்றும் அவரது வாக்குமூலம் பெறப்பட்ட சூழ்நிலைகள் ஆகியவை தங்களுக்குத் தெரியாது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

  16. காஸாவுக்கு உதவிப் பொருட்கள்: 22 படகுகளை தடுத்த இஸ்ரேல்

    காஸாவுக்கு உதவிப் பொருட்கள்

    பட மூலாதாரம், Global Sumud Flotilla/Handout via Reuters

    காஸாவுக்கு உதவிப் பொருட்களைக் கொண்டு சென்ற ஒரு படகுக் குழுவில் இருந்த 22 படகுகளை, கிரேக்கத்தின் கிரீட் தீவுக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேலியப் படைகள் இடைமறித்துள்ளதாக பாலத்தீன ஆதரவு சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நடவடிக்கையைக் 'கடற் கொள்ளை' என்று விவரித்துள்ள ‘குளோபல் சுமூத் ஃப்ளோடில்லா’ (GSF) ஏற்பாட்டாளர்கள், காஸாவிலிருந்து 965 கிலோமீட்டருக்கும் அதிக தொலைவில் இருந்த மக்கள் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

    காஸா மீது இஸ்ரேல் கடற்படை முற்றுகையை அறிவித்துள்ளது.

    சுமார் 175 ஆர்வலர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம், இந்த படகுகளின் அணிவகுப்பை ஒரு 'விளம்பர யுக்தி' என்று விவரித்துள்ளது. அவர்கள் வியாழக்கிழமை பிற்பகலில் கிரேக்கக் கடற்கரையில் இறக்கிவிடப்படுவார்கள் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கிதியோன் சார் தெரிவித்துள்ளார்.

    ஜிஎஸ்எப் தரவுகளின்படி, அந்த படகுக் குழுவில் எஞ்சியிருக்கும் 36 படகுகளில் பெரும்பாலானவை தற்போது கிரீட் தீவின் தெற்கு கடற்கரைக்கு அருகில் உள்ளன.

    ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த 58 படகுகளைக் கொண்ட இந்த அணிவகுப்பு, இஸ்ரேலின் காஸா முற்றுகையை எதிர்க்கும் நோக்கில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது பயணத்தைத் தொடங்கியது.

  17. வணக்கம் நேயர்களே!

    நேரலைப் பக்கத்தில் இன்று (01-05-2026) பிற்பகல் வரையிலும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை சுருக்கமாக தருவது சிராஜ்.

  18. நன்றி நேயர்களே!

    இன்று இந்த நேரலைப் பக்கத்தில் எங்களோடு இணைந்திருந்த நேயர்கள் அனைவருக்கும் பிபிசி தமிழின் நன்றி.

  19. "கொடிய பதிலடி கொடுப்போம்" - அமெரிக்காவை எச்சரித்த இரான்

    இரான்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, இரான் கொடி (கோப்புப்படம்)

    அமெரிக்கா மீண்டும் தாக்கினால், அமெரிக்காவுக்கு எதிராக "நீண்ட மற்றும் கொடிய" தாக்குதலைத் தொடங்குவோம் என்று இரானின் புரட்சிகர காவல் படையினர் எச்சரித்துள்ளனர்.

    உண்மையில், இரானுக்கு எதிரான சாத்தியமான ராணுவ நடவடிக்கை குறித்து அதிபர் டிரம்புக்கு விளக்கமளிக்கப்பட்டு வருவதாகவும், இது எண்ணெய் விலைகளில் கடுமையான உயர்வுக்கு வழிவகுத்ததாகவும் செய்திகள் தெரிவித்தன.

    இதற்கிடையில், இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் இன்ஸ்டாகிராமில், "கி.பி. 1622-ல், 115 ஆண்டுகால ஆக்கிரமிப்புக்குப் பிறகு, நாங்கள் ஐரோப்பிய காலனிவாதிகளை பாரசீக வளைகுடாவிலிருந்து விரட்டியடித்தோம், மேலும் இந்த வெற்றியை நினைவுகூரும் வகையில் 'வளைகுடா தினத்தை' கொண்டாடுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    "இன்றும் கூட, ஹோர்மூஸ் நீரிணையின் மீதான இரானின் கட்டுப்பாடு, அமெரிக்காவின் இருப்பு மற்றும் தலையீடு இல்லாமல் தனக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும்." என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

  20. கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை

    கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை

    தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கடும் வெயில் நிலவி வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    அதன்படி கோவையில் இன்று மதியத்திற்கு மேல் இருந்து பல்வேறு பகுதிகளில் வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் புறநகர் பகுதிகளில் மாலை காற்றுடன் கூடிய மழை பெய்தது.

    தடாகம், சோமையனூர், திருவள்ளுவர் நகர், நரசிம்மநாயக்கன்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.