நடிகர் சூரியின் 'மண்டாடி' திரைப்படம் பந்தயம் அடித்ததா? ஊடக விமர்சனம்

நடிகர் சூரியின் 'மண்டாடி' திரைப்படம் பந்தயம் அடித்ததா? ஊடக விமர்சனம்

பட மூலாதாரம், RS Infotainment/X

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

நடிகர் சூரி, தெலுங்கு நடிகர் சுஹாஸ் நடிப்பில், இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான 'மண்டாடி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

'விடுதலை', 'கருடன்', 'கொட்டுக்காளி' ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் இது. கடலோர மக்களின் வாழ்வியலையும் பாய்மரப் படகுப் பந்தயத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள 'மண்டாடி' திரைப்படம் எப்படி இருக்கிறது? ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

படத்தின் கதை என்ன?

ராமநாதபுரம் மாவட்டத்தின் முகவைப்பட்டினம் எனும் கடலோரக் கிராமத்தில் கதை நிகழ்கிறது. அங்கு பாரம்பரியமாக நடக்கும் பாய்மரப் படகுப் பந்தயத்தில் 'முகவை மைந்தன்ஸ்' அணியின் கேப்டன் மாரி, எதிரணியான 'சுனாமி ரைடர்ஸ்' கேப்டனைக் கொல்ல முயற்சிக்கிறார்.

இதையறிந்த எதிரணி கேப்டனின் தந்தையான சாட்டைப் புலி (சுஹாஸ்), மாரியைக் கொல்ல ஆட்களை அனுப்புகிறார். உயிருக்குப் பயந்து தப்பிக்கும் மாரி, சென்னையில் வசிக்கும் தன் ஊர்க்காரரான முத்துக்காளியிடம் (சூரி) உதவி கோருகிறார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு ஊரை விட்டுச் சென்ற முத்துக்காளி, மாரிக்கு உதவ மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்புகிறார். ஊரில் படகுப் போட்டிகளால் தான் இவ்வளவு பகையும் கலவரமும் நிலவுகிறது என்பதை உணரும் முத்துக்காளி, மாரியின் அணியைப் படகுப்போட்டிக்காகத் தயார் செய்கிறார். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே மண்டாடி திரைப்படத்தின் கதை.

நடிகர் சூரியின் 'மண்டாடி' திரைப்படம் பந்தயம் அடித்ததா? ஊடக விமர்சனம்

பட மூலாதாரம், RS Infotainment/youtube

படத்தின் திரைக்கதை மற்றும் இயக்கம் எப்படி உள்ளது?

தமிழ் சினிமாவில் மீனவர்களின் வாழ்க்கை என்றால் மீன்பிடிப்பதையும் அவர்களின் காதலையும் காட்டும் வழக்கமான பாணியைத் தவிர்த்து, மண்டாடியில் மீன்பிடிப்பதையே காட்டாமல் முதல்முறையாக படகுப்போட்டியை முழுநீளத் திரைப்படமாக எடுத்து கவனம் ஈர்க்கிறார் மதிமாறன் என்று தினமணி நாளிதழ் தனது விமர்சனத்தில் பாராட்டியுள்ளது.

தமிழ் சினிமாவில் விளையாட்டை கதைக்களமாக கொண்ட பல படங்கள் வந்திருந்தாலும், இதுவரை திரையில் அதிகம் காட்டப்படாத ஒரு புதிய விளையாட்டு உலகுக்குள் நம்மை அழைத்துச் செல்லும் முயற்சியிலேயே 'மண்டாடி' பாதி வெற்றி பெறுகிறது என்றுதான் சொல்ல வேண்டும் என இந்து தமிழ் குறிப்பிட்டுள்ளது.

போட்டிகளை மையமாகக் கொண்ட பகுதி புதுமையாக உள்ளது. ஆனால் அதைச் சுற்றி பின்னப்பட்டுள்ள கதையைத் திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக நகர்த்துவதில் இயக்குநர் தடுமாறியுள்ளார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது.

சூரியின் நடிப்பு எப்படி இருக்கிறது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"கதையின் நாயகனாகச் சூரி தனது பலம் மற்றும் பலவீனங்களைத் துல்லியமாகப் புரிந்து கொண்டு இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் ஒரு மாஸ் நடிகராக தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். ஆக்‌ஷன் காட்சிகள் அதற்கு சிறப்பாக கைகொடுத்துள்ளன" என இந்து தமிழ் தெரிவித்துள்ளது.

'கடலிலேயே எடுக்கப்பட்ட காட்சிகளில் எந்தத் தடுமாற்றமும் இல்லாத மீனவராகவே சூரி திரையில் தெரிந்தது அவரது நடிப்புத் திறனுக்கு இன்னும் கதைகள் தேவை என்பதையே காட்டுகின்றன. காதல் மற்றும் சண்டைக்காட்சிகளிலும் புதிய சூரி தெரிகிறார். தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோவாக எல்லா தகுதிகளும் இருக்கிறது' என தினமணி நாளிதழ் கூறுகிறது.

'இந்த திரைப்படத்தில் சுஹாஸின் நடிப்பும் பாராட்டப்பட்டுள்ளது. இந்தக் கதைக்கு சூரி, சுஹாஸ் போன்ற இயல்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய நடிகர்கள் கிடைத்திருப்பது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். சூரிக்கு இணையான வகையில் சுஹாஸின் கதாபாத்திரத்தையும் இயக்குநர் வலுவாக உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது' என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

'பிளாஷ்பேக் காட்சிகளுக்கும் தற்போதைய காட்சிகளுக்கும் சுஹாஸ் நல்ல நடிப்பு வித்தியாசத்தைக் காட்டியிருப்பது பலம். ஆனால், தமிழில் கனமான குரலை அவருக்கு டப்பிங் குரலாக வைத்துள்ளனர். சில காட்சிகளில் அது கைகொடுத்தாலும் சில காட்சிகளில் விலகலையும் கொடுக்கிறது' என தினமணி விமர்சித்துள்ளது.

மகிமா நம்பியாரின் நடிப்பும் இயல்பாக இருப்பதாக சினிமா விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

மண்டாடி திரைப்பட டிரைலரில் இருந்து ஒரு காட்சி

பட மூலாதாரம், RS Infotainment/youtube

திரைப்படத்தின் ஒளிப்பதிவு மற்றும் இசை

தொழில்நுட்ப ரீதியாக ஜி.வி. பிரகாஷின் இசையும், எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவும் 'மண்டாடி' படத்திற்கு முதுகெலும்பாக அமைந்துள்ளன என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. உண்மையான பாய்மரப் படகு பந்தயத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை தனது காட்சிகளின் மூலம் ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் கதிர் எனவும் அது மேலும் கூறியுள்ளது.

கடலுக்குள் படகுப்போட்டியை கழுகுப் பார்வையில் படமாக்கியது; படகில் இருப்பவர்களின் உடல்மொழியை விதவிதமான கோணத்தில் காட்டியது என ஒளிப்பதிவாளர் அபாரமான பங்களிப்பைச் செய்திருக்கிறார். என தினமணி பாராட்டியுள்ளது.

குறிப்பாக, இடைவேளைக்கு முந்தைய சண்டைக் காட்சியும், சுஹாசுக்கும் சூரிக்கும் இடையே நங்கூரத்தைப் பயன்படுத்தி நடக்கும் சண்டைக் காட்சியும் மிக அற்புதம் என இந்து தமிழ் கூறியுள்ளது.

'மண்டாடி' புதுமைகள் எதுவும் இல்லாத வழக்கமான கமர்ஷியல் கதைக்களத்தை கொண்டிருந்தாலும் அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், நடிகர்களின் நல்ல நடிப்பாலும் பார்வையாளர்களுக்கு ஈர்க்கக்கூடிய திரை அனுபவத்தை தருகிறது என இந்து தமிழ் பாராட்டு தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு