'இரண்டாவதும் பேத்தி பிறந்ததால் குழந்தையை கொன்ற பாட்டி' - ஈரோடு சம்பவம் எழுப்பும் கேள்விகள்

பட மூலாதாரம், Puneet Vikram Singh/Getty Images
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் இருக்கும் தகவல்கள் சங்கடம் தரலாம்
சேலத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன் மகளுக்கு இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் பிறந்த 18 மணி நேரத்துக்குள் குழந்தையைக் கொலை செய்துள்ளார். குழந்தை மூச்சுத்திணறி இறந்து விட்டதாகக் கூறி, உண்மையை மறைக்க நினைத்த நிலையில், மருத்துவர் சந்தேகமடைந்து அவருக்குத் தெரியாமல் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறை விசாரணையில் குழந்தையைக் கொன்ற அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மகளுக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், இரண்டாவதும் பெண்ணாகப் பிறந்ததால் தன் மகளால் வளர்க்க முடியாமல் கஷ்டப்படுவாள் என்று கருதி கொலை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கென்று பல்வேறு சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வரும் நிலையில், இந்தச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கென்று இருக்கும் பொதுவான சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல் மகளிர் நலத்திட்டங்களால், பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களைத் தடுக்க முடியாது என்கிறார் மகளிர் உரிமை செயற்பாட்டாளர் தாரா கிருஷ்ணசாமி.
அதிகாலையில் பிறந்த பெண் குழந்தை, இரவுக்குள் இறந்தது எப்படி?
ஈரோடு, பவானியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷிணி, பிரசவத்திற்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே சேலத்தில் தனியார் மருத்துவமனையில் கர்ப்ப காலத்தில் சிகிச்சை பெற்ற பிரியதர்ஷிணி, பிரசவத்திற்காக எடப்பாடி அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை 17 அன்று சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் தலை திரும்பியிருப்பதால் மிகவும் கஷ்டமென்று கூறி, வேறு மருத்துவமனைக்குப் பரிந்துரைத்ததால் பவானி தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜூலை 17 இரவு 11 மணியளவில் அங்கு சேர்க்கப்பட்ட அவருக்கு மறுநாள் அதாவது ஜூலை 18 அதிகாலை 4:40 மணியளவில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அன்று இரவு 8:40 மணியளவில், குழந்தை மூச்சின்றி அசைவின்றி இருப்பதாக செவிலியரிடம் அந்தப் பெண்ணின் தாயார் தங்கமணியும், அவருடைய சகோதரர் பூபதியும் தகவல் கூறியுள்ளனர். மருத்துவர்கள் குழந்தையைப் பரிசோதித்தபோது, குழந்தை இறந்திருந்தது.
பவானி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, குழந்தையை அந்தத் தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் பார்த்தபோது, குழந்தையின் கழுத்து, வாய், உதடு ஆகிய இடங்களில் இரத்தக்கட்டுடன் கன்றிப்போய் இருந்துள்ளது. அதன்பின் குழந்தை இறந்து போனதை பவானி அரசு மருத்துவமனையில் உறுதிப்படுத்தி, பிரேதத்தை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
அந்தப் பெண்ணுக்கு பிரசவம் நடந்து, குழந்தை இறந்த தனியார் மருத்துவமனை, கடந்த 18 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதனை நடத்தி வரும் தம்பதியினர் இருவரும் மருத்துவர்கள். மனைவி மகப்பேறு நல மருத்துவராகவும், கணவர் குழந்தைகள் நல மருத்துவராகவும் உள்ளனர்.

பட மூலாதாரம், Ankit Sah/Getty Images
ஆரோக்கியமாக இருந்த குழந்தை திடீரென இறந்ததால் சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகியான மருத்துவர் நடராஜன், பவானி காவல் நிலையத்தில் இதுபற்றி தகவல் அளித்துள்ளார்.
உடனடியாக காவல் துறையினர் அங்கு வந்து விசாரித்தபோது, பெண்ணின் தாயார் தங்கமணி முதலில் மறுத்துவிட்டு பின்பு குழந்தையைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பிபிசியிடம் பேசிய மருத்துவர் நடராஜன், ''அந்தப் பெண் இதற்கு முன்பு இங்கு சிகிச்சைக்கு வந்ததில்லை. குழந்தையின் தலை திரும்பிவிட்டதால் பிரசவம் கஷ்டம் என்று பரிந்துரைத்ததால் இங்கு வந்தனர். அறுவை சிகிச்சை செய்தே குழந்தை எடுக்கப்பட்டது. குழந்தை அழகாக, ஆரோக்கியமாக நல்ல எடையுடன் இருந்தது. அன்று மாலை அந்த பெண்ணை அறைக்கு அனுப்பிவிட்டோம். அப்போதே அவர் நடக்க வைத்துள்ளனர். தாயும் சேயும் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தனர்.'' என்றார்.
''அன்று மாலை 6:30 மணிக்கு ஒரு மருத்துவர் சென்று பார்த்தபோது குழந்தை நன்றாக இருந்துள்ளது. திடீரென 8:40 மணிக்கு செவிலியரிடம் அந்தப் பெண்ணின் தாயும் தாய் மாமனும் குழந்தை மூச்சின்றி இருப்பதாகக் கூறினர். நான் குழந்தையைப் பார்த்தபோது, அது இறந்திருந்தது. அதன் கழுத்து, வாய், உதடு சிவந்திருந்தது. முகத்தில் லேசான காயம் இருந்தது. குழந்தையின் பாட்டியிடம் கேட்டபோது, குழந்தை புரண்டு கட்டில் கம்பியின் மீது மோதி விட்டதாக முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார்.'' என்றும் தெரிவித்தார்.
''குழந்தைக்கு அப்படிக் காயம் பட வாய்ப்பேயில்லை என்பதால், அந்தப் பெண்ணுக்குத் தகவல் தெரிவிக்காமல் பவானி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தேன். அவர்கள் வந்து விசாரித்த பின்பே, அந்தப்பெண்ணின் மகளுக்கு ஏற்கெனவே 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதும், இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் அதை வளர்க்க தன் மகள் கஷ்டப்படுவாள் என்று நினைத்து கொன்று விட்ட தகவலும் வெளியில் தெரியவந்தது. நன்றாக இருந்த குழந்தை திடீரென இறந்ததுதான் எங்களின் சந்தேகத்திற்குக் காரணம்.'' என்றார் அவர்.
பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் கொலை வழக்காக மாற்றம்!

பட மூலாதாரம், Phoenix Prithiv/Getty Images
அரசு மற்றும் தனியார் மருத்துவமனை என எங்கே பிரசவம் நடந்தாலும், பிரசவித்த பெண் மற்றும் குழந்தையின் நலன், அவர்களின் நிலை குறித்து மாவட்ட சுகாதாரத்துறைக்குத் தகவல் பதிய வேண்டுமென்பதும், மருத்துவமனையில் குழந்தை இறந்ததால் அதற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறைக்கு அறிக்கை தரவேண்டுமென்பதும் இதில் ஒரு முக்கிய காரணியாக இருந்துள்ளது.
பிபிசியிடம் பேசிய ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் அருணா, ''அந்த பெண் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றாலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவமும், குழந்தை இறப்பும் நடந்துள்ளது. அதனால் மருத்துவமனை நிர்வாகத்திடம் இதுபற்றி சுகாதாரத்துறை இணை இயக்குநரால் அறிக்கை பெறப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகமே காவல்துறையில் புகார் அளித்துள்ளது.'' என்றார்.
பவானி காவல்துறையிடம் அந்தப் பெண் கொடுத்த வாக்குமூலம் குறித்து, பிபிசியிடம் பேசிய போலீசார், ''அந்தப் பெண்ணின் மருமகன் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர். அவரால் அந்தக் குடும்பத்துக்கு எந்த உதவியுமில்லை. தன் மகளுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறக்குமென்று தங்கமணி நினைத்துள்ளார். ஆனால் பெண் குழந்தை பிறந்ததால் தன் மகள் கஷ்டப்படுவாள் என்று நினைத்து இந்த முடிவை எடுத்துள்ளார்.'' என்றனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஜூலை 18 அதிகாலையில் பெண் குழந்தை பிறந்ததாகக் கூறியதும், குழந்தையின் தாய், தந்தை, தாய் வழிப்பாட்டி எல்லோருமே மிகவும் சோகத்தில் இருந்துள்ளனர். குழந்தை கவனிப்பில் ஆர்வமின்றி இருந்துள்ளனர். அப்போது பிரியதர்ஷிணியின் கணவர் செல்வகுமாருக்கு திடீரென வலிப்பும், மயக்கமும் ஏற்பட்டு, அங்கேயே சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளார். அன்று இரவு 7:20 மணிக்கு தங்கமணியின் சகோதரர் பூபதி வந்துள்ளார். அதற்குப் பின்பே இரவு 8:40 மணிக்கு, குழந்தை அசைவின்றி இருப்பதாக செவிலியரிடம் புகார் தெரிவித்துள்ளனர் என்று முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
''இன்றைக்கு குழந்தைகள் வேண்டுமென்று ஆயிரக்கணக்கான தம்பதியர், பணம் செலவழித்து விட்டு, குழந்தையை தத்து எடுக்கப் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவர்களால் குழந்தையை வளர்க்க முடியாது என்று நினைத்திருந்தால் அதை சட்டப்படி தத்து கொடுப்பதற்கான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்திருப்போம். ஆனால் அதைச்செய்யாமல் திடீரென முடிவெடுத்து இப்படிச் செய்துள்ளனர். குழந்தை இறந்து விட்டது என்றால் வீட்டிற்கு அனுப்பிவிடுவோம் என்று நினைத்து அறியாமையில் செய்துள்ளார்.'' என்றார் மருத்துவர் நடராஜன்.
குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்து நெரிக்கப்பட்டு இறந்தது உறுதியாகியிருப்பதால், முதலில் சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றியிருப்பதாக பவானி காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்திருப்பதாக பவானி காவல் ஆய்வாளர் சரவணன் பிபிசியிடம் தெரிவித்தார்.
பெண் குழந்தைகளுக்காக தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள்!
தமிழக அரசின் சுகாதாரத்துறை பல்வேறு குழந்தை நலத்திட்டங்களை செயல்படுத்துவதால் குழந்தை இறப்பு விகிதமும் மகப்பேறு மரணமும் குறைந்துள்ளதாகத் சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.
அதேபோன்று பெண் குழந்தைகளுக்கான பல சிறப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் பெண் குழந்தைகளை கொல்லும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் திண்டுக்கல், கோடைசாலையைச் சேர்ந்த சிவசக்தி என்ற 23 வயது பெண், தனக்கு 5 வயதில் ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை கொன்ற வழக்கில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் பெண் சிசுக்கொலை அதிகமாக நடந்து வருவதைத் தடுக்கும் நோக்கிலும், பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது கடந்த 1992 ஆம் ஆண்டில் முதல் முறையாக சேலம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழக அரசின் சமூகநலத்துறை இணைய பக்கத்தில், ''புதுமையான தொட்டில் குழந்தை திட்டம் இந்தியாவிலும் மற்ற நாடுகளிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் தொட்டில் குழந்தைத் திட்டத்தின் நேர்மறையான விளைவு, 2001 இல் 942/1000 ஆக இருந்த குழந்தை பாலின விகிதம் 2011 இல் 943/1000 ஆக உயர்ந்துள்ளது.'' என்றும் இத்திட்டம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
தற்போது தொட்டில் குழந்தை திட்டம் நடைமுறையில் இல்லாவிட்டாலும், இந்தத் திட்டம் துவங்கப்பட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்தான் தற்போது பெண் குழந்தையைக் கொன்ற வழக்கில் கைதாகியுள்ளார்.
தமிழக அரசின் சமூகநலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், இப்போது இல்லாவிட்டாலும் அதற்குப் பதிலாக வேறு பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

பட மூலாதாரம், Puneet Vikram Singh/Getty Images
இதுபற்றி சமூகநலத்துறையிடம் தகவல் கோரியபோது, அங்குள்ள அலுவலர்கள் பல்வேறு திட்டங்களையும் விளக்கினர்.
பெயர் குறிப்பிட வேண்டாம் என்கிற நிபந்தனையுடன் பிபிசியிடம் பேசிய சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையைச் சேர்ந்த அலுவலர் ஒருவர், ''பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில், ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் அரசு சார்பில் 50 ஆயிரம் ரூபாயும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரமும் டெபாஸிட் செய்யப்படும். குடும்பத்தில் ஆண் குழந்தை இருக்கக் கூடாது என்பது மிக முக்கியமான நிபந்தனையாகும்.'' என்றார்.
''குழந்தை பிறந்த 3 ஆண்டுகளுக்குள் இதுபற்றி அரசுக்குத் தெரிவித்தால் அந்த தொகை நிலையான வைப்புத்தொகையாக செய்யப்படும். அதற்கு குடும்ப கட்டுப்பாடு செய்த சான்று சமர்ப்பிக்க வேண்டும். அப்படிச் செய்தால் அந்த குழந்தைக்கு 18 வயது நிறைவடையும்போது முதிர்வுத்தொகை வழங்கப்படும். ஆனால் அந்த பெண் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சான்றை அளிப்பது அவசியம். ஒரு வேளை முதல் பெண் குழந்தை பிறந்த 3 ஆண்டுகளுக்குள் பதிவு செய்யாவிட்டால், இரண்டாவது பெண் குழந்தை பிறந்த 3 ஆண்டுகளுக்குள் இரு பெண் குழந்தைகளுக்கும் சேர்த்து பதிவு செய்யலாம்.'' என்றும் அவர் விளக்கினார்.
தமிழக வெற்றிக்கழக அரசால் 'தாய்மாமன் தங்கமோதிரம்' என்ற திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க நாணயம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வளவு திட்டங்களுக்குப் பின்னும் பெண் குழந்தைகளைக் கொல்லும் போக்கு தொடர்ந்து வருவதற்கு பல்வேறு சமூகக் காரணங்கள் இருப்பதாகவும், அதை மாற்றுவதற்கு அரசு முயல வேண்டுமென்றும் வலியுறுத்தப்படுகிறது.

பட மூலாதாரம், Tara Krishnamoorthy
பிபிசியிடம் பேசிய மகளிர் உரிமை செயற்பாட்டாளரும், சக்தி அமைப்பின் இணை நிறுவனருமான தாரா கிருஷ்ணசுவாமி, ''பெண்கள் உரிமை, பெண்கள் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் மாநிலங்களுக்கு இடையில் புள்ளி விபரங்களை ஒப்பிடுவதே தவறு. அங்கே ஒரு பெண் அதிகமாக தாக்கப்படுகிறார், இங்கே குறைவாக தாக்கப்படுகிறோம் என்பதால் இங்குள்ள பெண்ணின் வலி குறைவு என்று அர்த்தமாகாது. அதேபோன்று தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் பெண் குழந்தை மரணம் அதிகமாகவுள்ளது, இங்கே குறைவாகவுள்ளது என்ற ஒப்பீடும் தவறு. இது ஒட்டு மொத்தமாக தீர்க்கப்பட வேண்டிய சமூகப்பிரச்னை.'' என்றார்.
''தொட்டில் குழந்தை திட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்தார். கருணாநிதி சில திட்டங்களைச் செயல்படுத்தினார். ஆனால் இந்தத் திட்டங்களால் பெண் பாலியல் கொடுமை, பெண் சிசுக்கொலை, வரதட்சணை போன்ற சமூகக்கொடுமைகளுக்குத் தீர்வு காணமுடியாது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆணாதிக்கச் சமூகமாக தமிழ்ச்சமூகம் ஊறிப்போயிருப்பதை மாற்ற தொடர் நடவடிக்கைகள் தேவை. ஆனால் இப்போதுள்ள அரசு அறிவித்துள்ள தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் உட்பட எல்லாமே தேர்தல் கால திட்டங்களாகவே உள்ளன. இந்த திட்டங்கள் தேவைதான். ஆனால் இவை மட்டுமே போதாது'' என்றார் தாரா கிருஷ்ணசுவாமி.
அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தும் சமூகச்சீர்திருத்தங்களில் அரசுகள் கவனம் செலுத்த வேண்டுமென்று வலியுறுத்தும் தாரா கிருஷ்ணசுவாமி, மகப்பேறு மரணங்கள், பெண் சிசுக்கொலை ஆகிய இரண்டிலும் அரசு இன்னும் தீவிர கவனம் செலுத்துவது அவசியம் என்கிறார்.
சிறுமிகள் மீதான பாலியல் கொடுமைகள், குழந்தைத் திருமணம், பெண் சிசுக்கொலை ஆகியவை அதிகரித்து வருவதை 'க்ரை' (CRY) என்ற தன்னார்வ அமைப்பு கணக்கெடுத்து தமிழக அரசிடம் கொடுத்ததைச் சுட்டிக்காட்டும் அவர், இவற்றைக் குறைக்க அரசு தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது என்கிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































