ஓமனில் இந்திய கொடி ஏந்திய கப்பல் பழுது - அனைத்து பணியாளர்களும் மீட்கப்பட்டதாக விளக்கம்

பட மூலாதாரம், @Indemb_Muscat
ஓமன் கடலோரப் பகுதிக்கு அருகில் இந்தியக் கொடி ஏந்திய கப்பல் ஒன்றின் இன்ஜின் பழுதடைந்ததை அடுத்து, அதில் இருந்த 14 இந்தியப் பணியாளர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமனில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தெரிவித்துள்ளது.
ஓமனில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில், "இந்தியக் கொடி ஏந்திய எம்எஸ்வி விராட் 1 கப்பலின் மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்தது. அனைத்து 14 பணியாளர்களும் மீட்கப்பட்டு, தற்போது ஜபல் அலி 9 கப்பலில் ஏறி மும்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில் இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில், "ஓமன் கடலோரப் பகுதியில் இந்தியக் கொடி ஏந்திய விராட்-1 கப்பல் தொடர்பான விபத்து பற்றிய தகவல் தூதரகத்திற்கு கிடைத்தது. கப்பலில் 14 இந்தியப் பணியாளர்கள் இருந்தனர். இவர்களில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்" என்று எழுதியிருந்தது.
சிறிது நேரத்திற்குப் பிறகு இந்திய தூதரகம், "ஒரு சிறந்த மற்றும் தொடர்ச்சியான மீட்பு நடவடிக்கையின் மூலம் எம்எஸ்வி விராட்-1 கப்பலின் 14 பணியாளர்களில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் எம்வி ஜபல் அலி-9 கப்பலுக்குப் பாதுகாப்பாக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளனர்" என்று எழுதியது.
"மீதமுள்ள பணியாளர்களை மீட்கும் நடவடிக்கையும் தொடர்ந்து நடந்து வருகிறது, அது விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது." என பதிவிட்டிருந்தது.
கப்பலின் இன்ஜின் பழுதடைந்துவிட்டதாக தூதரகம் மற்றொரு பதிவில் தகவல் அளித்திருந்தது. இருப்பினும், கப்பல் மூழ்கிவிட்டதாக பல ஊடக செய்திகள் கூறி வருகின்றன. ஆனால் பிபிசி இதனை உறுதிப்படுத்தவில்லை.
"தகவல்களின்படி, கப்பலின் இன்ஜின் பழுதடைந்தது, அதன் பிறகு பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் ஒரு லைஃப்ராஃப்ட் (மீட்புப் படகு) மூலம் வெளியேற்றப்பட்டனர்" என்று தூதரகம் எழுதியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
மற்றொரு கப்பலில் இந்தியர் மரணம்
இதற்கிடையில், ஓமனில் உள்ள இந்திய தூதரகம் சனிக்கிழமை சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில், "இந்திய குடிமகன் நிஷாந்த் உயிர்த்தநாதன் மருத்துவக் சிக்கல்கள் காரணமாக மரணமடைந்துள்ளார். அவரது உடல் தற்போது துகம் துறைமுகத்தில் உள்ள எம்டி செலஸ்டியல் கப்பலில் வைக்கப்பட்டுள்ளது" என்று எழுதியுள்ளது.
"தூதரகம் கப்பலின் மேலாண்மை நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது மற்றும் அனைத்து தரப்பினருடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. அவரது உடலை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன."
பிபிசி தமிழ் தகவலின்படி, இந்தியாவில் மாலுமிகள் மற்றும் கப்பல் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது, அதில் நிஷாந்தின் உடல் குளிர்ந்த நீர் பாட்டில்கள் மூலம் பதப்படுத்தப்படுவதைக் காட்டுகிறது.
இருப்பினும், பிபிசியால் இந்த வீடியோவை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

பட மூலாதாரம், Julia Demaree Nikhinson/POOL/AFP via Getty Images
இதற்கு முன்பு, ஓமன் கடலோரப் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ருபியோவிடம் பேசினார்.
அமெரிக்க ராணுவம் ஓமன் கடலோரப் பகுதியில் வணிகக் கப்பலான 'செடெபெல்லோ' மீது ஜூன் 9 அன்று தாக்குதல் நடத்தியது.
இந்தக் கப்பலில் 24 இந்தியப் பணியாளர்கள் இருந்தனர், அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டனர், அதே நேரத்தில் மூன்று மாலுமிகள் உயிரிழந்தனர்.
இது முதல் சம்பவமல்ல, இதற்கு முன்பு ஜூன் 8 மற்றும் ஜூன் 11 ஆகிய தேதிகளிலும் வளைகுடா பகுதியில் இந்தியப் பணியாளர்களைக் கொண்ட இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, ஆனால் அவற்றில் யாரும் உயிரிழக்கவில்லை மற்றும் அனைத்து மாலுமிகளும் மீட்கப்பட்டனர்.
மூன்று மாலுமிகள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவிடம் இந்தியா தனது எதிர்ப்பைப் பதிவு செய்தது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இது குறித்து அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ருபியோவிடம் பேசினார்.
இந்த உரையாடலில் அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் தனது 'கடும் எதிர்ப்பை' பதிவு செய்ததாகவும், இது போன்ற 'உயிர்கொல்லி தாக்குதல் நியாயமற்றது' என்று கூறியதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
சனிக்கிழமை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் எஸ் ஜெய்சங்கர் மற்றும் ருபியோ இடையேயான உரையாடலின் விவரங்களை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, வளைகுடா பகுதியில் அமெரிக்க முற்றுகையை மீறுவதும் இரானிய எண்ணெயை சட்டவிரோதமாக கடத்துவதும் பொறுத்துக்கொள்ளப்படாது என்று ருபியோ கூறியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "வெளியுறவு செயலாளர் மார்கோ ருபியோ இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் பேசினார். இரு தலைவர்களும் ஹோர்மூஸ் நீரிணையில் நடந்த சமீபத்திய சம்பவங்கள் குறித்து விவாதித்தனர்" என்று தெரிவித்துள்ளது.
மூன்று இந்திய மாலுமிகள் மரணத்திற்கு கடுமையான எதிர்வினை

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க ராணுவத்தின் இந்தத் தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நல்லுறவு குறித்து மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில், "அமெரிக்கத் தாக்குதல்களில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகும், வருத்தமும் இல்லை, மன்னிப்பும் இல்லை. மாறாக அமெரிக்கா தொடர்ந்து கட்டளைகளைப் பிறப்பித்து வருகிறது. அவர்களின் வார்த்தைகளைப் படியுங்கள், அமெரிக்க ராணுவத்தின் உத்தரவுகளுக்கு உடனடியாகக் கீழ்ப்படியுங்கள். எந்தவொரு மீறலும் பொறுத்துக்கொள்ளப்படாது." என்று எழுதியுள்ளார்.
அவர், "ஒரு சுதந்திர நாடு இதுபோன்ற மொழியை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. ஆனால் நமது சமரசம் செய்துகொண்ட பிரதமர், நாட்டின் மரியாதையைப் பாதுகாக்க மாட்டார்" என்று எழுதியுள்ளார்.
அவர் தனது ஃபேஸ்புக் பதிவில், "அடுத்த வாரம் ஜி7 மாநாட்டில், நமது மாலுமிகள் கொல்லப்பட்ட சில நாட்களிலேயே, மோதி ஜி புன்னகைப்பார், கட்டிப்பிடிப்பார் மற்றும் ஒப்பந்தங்களைச் செய்வார். ஆனால், அந்த மூன்று இந்தியர்களுக்காக அவரிடம் ஒரு வார்த்தை கூட இருக்காது."
"சமரசம் செய்துகொண்ட பிரதமரால் பாரத மாதாவின் மகன்களைப் பாதுகாக்க முடியாது, ஏனென்றால் அந்த மகன்களின் உயிரைப் பறித்தவர்களைக் கோபப்படுத்த இவருக்கு துணிச்சலும் இல்லை, வலிமையும் இல்லை." என்று எழுதியுள்ளார்.
அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில், "இந்த சோகமான சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கடந்துவிட்டன. ஆனால் இதுவரை பிரதமர் நரேந்திர மோதி தரப்பிலிருந்து எந்தவொரு பொது அறிக்கையோ அல்லது இரங்கல் செய்தியோ வரவில்லை. மோதி ஜி, ஒட்டுமொத்த நாடும் இதற்காகக் காத்துக்கொண்டிருந்தது."
"நீங்கள் 'நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்று கூறினீர்கள், ஆனால் இந்தியாவின் உலகளாவிய நற்பெயரையும் இறையாண்மையையும் நீங்கள் பலவீனப்படுத்தியுள்ளீர்கள் என்பதை நிரூபிக்க வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை."
"நமது தேசிய நலன்கள் தினசரி சமரசம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் முரண்பாடு என்னவென்றால், நீங்கள் அதை 'விஸ்வகுரு' என்ற கதையாடலின் மூலம் நேர்மறையான ஒன்றாக முன்வைக்க முயற்சிக்கிறீர்கள்" என்று எழுதியுள்ளார்.
அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸின் ராஜதந்திர செய்தியாளர் எட்வர்ட் வாங்க் என்பவரும் இந்தியக் கப்பல்கள் மீதான அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ருபியோவின் நிலைப்பாடு குறித்து சமூக ஊடகங்களில் ஒரு பதிவில், இது 'இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை' என்று கூறியிருந்தார்.
அவர், "டிரம்ப் நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவைக் கோபப்படுத்தும் வகையில் தொடர்கின்றன. குறிப்பாக சமீபத்தில் ஓமன் அருகே வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். இப்போது ருபியோ இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்" என்று எழுதியிருந்தார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























