சிஜேபி போராட்டமும் அரசின் நடவடிக்கைகளும் - குழப்பத்தை ஏற்படுத்தும் 4 விஷயங்கள்

திங்கட்கிழமை அன்று, ஜேபி நட்டா சிஜேபி செய்தி தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரான்கா ஆகியோரைச் சந்தித்தார்

பட மூலாதாரம், @JPNadda

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் என்பது மிகவும் சாதாரணமான நிகழ்வாக இருந்து வருகின்றன.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் வலுவான மத்திய அரசின் ஆட்சிக் காலத்தில், அரசை உண்மையாகவே கவலைப்படுத்தும் அளவிலான போராட்டங்கள் மிகவும் குறைவாகவே நடந்துள்ளன.

காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி), சமூக வலைதளங்களின் மெய்நிகர் உலகத்திலிருந்து வெளிவந்து, அமைப்புச் சீர்திருத்தங்களை வலியுறுத்தும் இயக்கமாக மாறியுள்ளது.

சிஜேபி இயக்கத்தையும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மோடி அரசு இதுவரை கையாண்ட விதத்தைப் பார்க்கும்போது, இந்த இயக்கத்தின் தீவிரத்தை அரசு முழுமையாக உணரவில்லை என்றே தோன்றுகிறது.

இந்தப் போராட்டம் காலப்போக்கில் தானாகவே வலுவிழந்து மறைந்துவிடும் என்று அரசு கருதியதாகத் தெரிகிறது.

ஆனால், திங்கள்கிழமை (ஜூலை 20) நடந்த சம்பவங்கள், இது வெறும் சிஜேபி சார்ந்த போராட்டம் மட்டுமல்ல; அரசின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த பெருமளவான மக்களும் இதில் இணைந்திருந்தனர் என்பதை காட்டுகின்றன.

இந்த அனைத்திற்கும் மத்தியில், சிஜேபி தரப்பிலும் அரசுத் தரப்பிலும் பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. சம்பவங்களின் காலவரிசை பல கேள்விகளை எழுப்புகின்றன. முதலில், அரசின் சில நடவடிக்கைகளைப் பார்ப்போம்.

சதீஷ் கோல்ச்சா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சதீஷ் கோல்ச்சா

1. டெல்லி காவல் ஆணையர் திடீர் மாற்றம்

ஜூலை 17 அன்று, மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சாவை திடீரென பதவியில் இருந்து நீக்கி, அனுராக் குமாரை மூன்று ஆண்டுகள் பதவிக்காலத்துடன் புதிய காவல் ஆணையராக நியமித்தது.

சதீஷ் கோல்சாவின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே அவர் மாற்றப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாக, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டத்தை அவர் கையாண்ட விதம் இருந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. தி டெலிகிராப் நாளிதழும், சிஜேபி போராட்டங்களே அவரது நீக்கத்திற்கான முக்கிய காரணமாக இருந்ததாக குறிப்பிட்டது

"சதீஷ் கோல்சா நீக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை உள்துறை அமைச்சகம் வெளியிடவில்லை. எனினும், ஜந்தர் மந்தர் அருகே நடைபெற்று வந்த சிஜேபி போராட்டத்தை கையாண்ட விதம் உள்ளிட்ட சில நிர்வாக முடிவுகள் குறித்து அரசு அதிருப்தியில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன," என்று தி டெலிகிராப் எழுதியுள்ளது.

புதிய காவல் ஆணையரின் நியமனம், ஜூலை 20 அன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு சில நாட்களுக்கு முன்பாகவே நடைபெற்றது. இதனால், சதீஷ் கோல்சாவின் மாற்றமும் அனுராக் குமாரின் நியமனமும், சிஜேபி விவகாரத்தை அரசு எதிர்பார்த்தபடி கையாள முடியவில்லை என்பதற்கான அறிகுறியாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

ஜேபி நட்டா

பட மூலாதாரம், Getty Images

2. ஜே.பி. நட்டா ஏன் நேரில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கியதிலிருந்து முதல்முறையாக, மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தங்களைத் தொடர்புகொண்டதாக திங்கள்கிழமை சிஜேபி கூறியது.

''’நாடாளுமன்றம் நோக்கிய பேரணிக்காக’ ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டிருந்த நிலையில், சிஜேபி செய்தித் தொடர்பாளர்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்தனர். மறுபுறம், பேச்சுவார்த்தைக்காக சிஜேபி உறுப்பினர்களே தன்னை அணுகியதாக நட்டா கூறினார். அதாவது, இந்த சந்திப்புக்கான முன்முயற்சி யாரிடமிருந்து வந்தது என்பது குறித்து அரசும் சிஜேபியும் ஒரே நிலைப்பாட்டை எடுத்திருக்கவில்லை.

இந்தச் சந்திப்பில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. குறிப்பாக, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படுமா என்பது குறித்து அரசு எந்த உறுதியையும் வழங்கவில்லை.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல காவல் தடுப்புகளைத் தாண்ட முயன்றுக் கொண்டிருந்த நேரத்தில், நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பான வழக்கமான உரையை பிரதமர் நரேந்திர மோதி நிகழ்த்திக் கொண்டிருந்தார். அவரிடம் இருந்து, சில நூறு மீட்டர் தூரத்தில் இளைஞர்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் குறித்து எந்தக் குறிப்பும் வரவில்லை.

அந்த உரையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் வெற்றிகரமான ராக்கெட் ஏவுதலைப் பாராட்டிய மோதி, "சில 56 வயதானவர்களால் அல்ல, சராசரி வயது 28 கொண்ட இளைஞர்களால் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது" என்று கூறினார். இந்தக் கருத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தின் பருவமழைக்கூட்டத்தொடரின் முதல் நாளன்று, பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சரவைத் தன் சகாக்களுடன் ஊடகங்களைச் சந்தித்துப் பேசினார்

சிஜேபி போராட்டத்தையோ, மூன்று வாரங்களாக உண்ணாவிரதத்தில் இருந்த சோனம் வாங்சுக்கையோ மோதி அரசு ஆரம்பத்தில் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் இந்த இயக்கம் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியும் அரசுக்கு பெரிய சவாலாக மாறியபோது, வாங்சுக் காவல்துறையினரால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்ற அவரது மனைவியின் கோரிக்கைக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

சமூக ஊடகங்களுக்குள் மட்டுமே இந்த இயக்கம் முடங்கிவிடும் என்று அரசு கருதியிருக்கலாம். ஆனால் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்களும் இளைஞர்களும் ஆயிரக்கணக்கில் டெல்லி வந்து, சோனம் வாங்சுக் மற்றும் சிஜேபிக்கு ஆதரவாக தெருக்களில் இறங்கினர்.

நிலைமை மேலும் தீவிரமடைந்து, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா சிஜேபி பிரதிநிதிகளை நேரில் சந்திக்க வேண்டிய சூழல் உருவானது. இதற்கிடையில், காவல்துறையின் தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சுக்குப் பிறகும் போராட்டக்காரர்களின் மன உறுதி குறையவில்லை.

டெல்லி எல்லைகளில் நடைபெற்ற நீண்டகால விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு, பொதுமக்கள் இயக்கத்தின் அழுத்தத்தில் மத்திய அரசு பின்வாங்கிய மிக முக்கியமான நிகழ்வாக இது ஒப்பிடப்படுகிறது. அப்போது அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டியிருந்தது.

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுமாறு பிரதமர் நரேந்திர மோதி கோரியிருக்கலாம் என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர், ஆனால் அவ்வாறு செய்வது தமது அரசின் தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு ஈடானதாகும்.

அதனால், உண்ணாவிரதப் போராட்டக்காரர்களையும் அவர்களின் ஆதரவாளர்களையும் ஆரம்பத்தில் புறக்கணித்து, அவர்களை பாஜகவுக்கு எதிரான கருத்தியல் எதிரிகளாக சமூக ஊடகங்களில் சித்தரிப்பதே அரசின் முதல் அணுகுமுறையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்தபோது, ஏதேனும் துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்தால் அதன் பொறுப்பு அரசின் மீது விழும் என்பதை அரசு உணர்ந்திருக்கலாம்.

சோனம் வாங்சுக் ஜந்தர்

பட மூலாதாரம், Getty Images

3. சோனம் வாங்சுக்கின் நிபந்தனைகள் எழுப்பிய கேள்விகள்

சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், திங்கள்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கல்வி அமைப்பில் பொறுப்புக் கூறல் தொடர்பான பிரச்னையை எழுப்புவதாக அரசியல் கட்சித் தலைவர்கள் உறுதியளித்தால், வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வார் என்று தெரிவித்தார்.

இந்த நிபந்தனை நேரடியாக அரசிடம் எந்தக் கோரிக்கையையும் முன்வைக்காததாக இருந்தது. அதனால், இது மிகவும் எளிதான நிபந்தனையாகக் கருதப்பட்டது.

இதையடுத்து, இது ஒருதலைப்பட்சமான அறிவிப்பா, அல்லது ஒருவகையில் அரசுக்குக் கிடைத்த வெற்றியா என்ற கேள்விகள் எழத் தொடங்கின.

வாங்சுக்கின் உண்ணாவிரதத்தை முடிக்கும் நிபந்தனைகள் குறித்து அரசியல் விமர்சகரும் பேராசிரியருமான அபூர்வானந்த், "இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. பொறுப்புக் கூற வேண்டிய சுமை அரசிடமிருந்து எதிர்க்கட்சிகளிடம் மாற்றப்பட்டுள்ளது. நீங்கள் பொறுப்புக் கூறலை விருப்பத்திற்குரிய ஒன்றாக மாற்றிவிட்டீர்கள்; அதே சமயம் பொறுப்புக் கூறலைக் கோருவதையும் அதனுடன் சமமாக்கிவிட்டீர்கள்." என்று எழுதியிருந்தார்.

மேலும் அவர்,"இப்போது வாங்சுக் மையத்தில் இல்லை. மக்கள் தான் முக்கியமானவர்கள். தங்களது அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்ட அவர்கள் தெருக்களில் இறங்கியுள்ளனர். இவ்வளவு பெரிய மக்கள் திரள் கூடுவது அரசுக்கு ஒரு எச்சரிக்கை. இது மக்களின் தருணம்; அதற்கென ஒரு தனி முக்கியத்துவம் இருக்கிறது. டெல்லி மற்றும் பிற நகரங்களில் தெருக்களில் குவியும் மக்களைப் பாருங்கள். மக்கள் தங்களது குரலைக் கண்டுபிடித்துவிட்டனர். இத்தகைய ஒவ்வொரு தருணமும் ஜனநாயகத்திற்கு புதிய உயிர் ஊட்டுகிறது. இப்போது வாங்சுக் பின்னணிக்குச் சென்றுவிட்டார். மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர்,"என்று குறிப்பிட்டார்.

எனினும், சோனம் வாங்சுக் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற சிஜேபி போராட்டங்களுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த ஆதரவே இருந்தது. அவர் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய முதல் நாளில் பெரிய அளவில் மக்கள் திரள் காணப்படவில்லை. ஆனால் காவல்துறையினர் வாங்சுக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பிறகே போராட்டத்திற்கு ஆதரவாக மக்கள் திரளத் தொடங்கினர்.

ஆரம்பத்திலிருந்தே சிஜேபி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தது போலத் தோன்றியது. ஆனால் அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. இதற்கு முன்பும் சோனம் வாங்சுக் சிறையில் அடைக்கப்பட்ட அனுபவம் கொண்டவர். எனவே, இந்த அரசை சமரசத்திற்கு கொண்டு வருவது எளிதானது அல்ல என்பதை வாங்சுக் உணர்ந்திருந்திருக்கலாம்

திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை மோதல்களும் வெடித்தன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை மோதல்களும் வெடித்தன

4. அபிஜித் தீப்கே தனது உண்ணாவிரதத்தை ஏன் கைவிட்டார்?

சோனம் வாங்சுக் கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். அதற்கு முன்பு அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கவில்லை.

ஆனால் திங்கள்கிழமை காலை, சோனம் வாங்சுக்கின் வேண்டுகோளின் பேரில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக அபிஜித் திப்கே திடீரென அறிவித்தார்.

ஜந்தர் மந்தரில் உள்ள போராட்டத் தளத்தில் பேசிய சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ, இயக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல அபிஜித் திப்கேவுக்கு உடல் வலிமை தேவைப்படுவதால், தனது உண்ணாவிரதத்தை முடிக்குமாறு வாங்சுக் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். இதையடுத்து, திப்கே பழச்சாறு அருந்தி உண்ணாவிரதத்தை முடித்தார்.

உண்ணாவிரதத்தை முடித்த சிறிது நேரத்திலேயே, அபிஜித் திப்கே மற்றும் கீதாஞ்சலி ஆங்மோ ஆகியோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

அபிஜித் திப்கேயின் அரசியல் எழுச்சி, இந்தியப் பல்கலைக்கழக அரசியலின் வழியாக உருவானதல்ல.

முன்னதாக, ஊழல் எதிர்ப்பு அரசியலை முன்னிறுத்தும் ஆம் ஆத்மி கட்சியில் அவர் தன்னார்வலராக பணியாற்றியுள்ளார். இதை பயன்படுத்தி, பாஜக உள்ளிட்ட அவரது அரசியல் எதிரிகள் அவரை விமர்சித்து வருகின்றனர். எனினும், சிஜேபி ஒரு சுயாதீன இயக்கமாகவே தொடரும் என்று அபிஜித் திப்கே வலியுறுத்தி வருகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு