குஜராத்தில் இந்த சமூகங்கள் ஆகஸ்ட் 31-ஐ இரண்டாவது சுதந்திர தினமாக கொண்டாடுவது ஏன்?

குஜராத்
    • எழுதியவர், ராக்ஸி ககதேகர் சர்ரா
    • பதவி, பிபிசி குஜராத்தி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. இருப்பினும், நாட்டின் சில சமூகங்கள் இன்னும் சுதந்திரத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தன.

நாட்டின் விடுவிக்கப்பட்ட, நாடோடி மற்றும் அரை நாடோடி பழங்குடியின மக்களில் ஒரு பெரும் பகுதியினர் பிரிட்டிஷ் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தின் கீழ் 'குற்றப் பழங்குடியினர்' என்று அடையாளப்படுத்தப்பட்டனர். அவர்கள் குறிப்பிட்ட இடங்களில் வசிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

இந்தச் சட்டம் சுதந்திரத்திற்குப் பிறகும் ஐந்து ஆண்டுகள் அமலில் இருந்தது.

1952 ஆகஸ்ட் 31 அன்று அந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகே இந்தச் சமூகங்கள் 'விடுவிக்கப்பட்டவர்கள்' அல்லது டீ-நோட்டிஃபைடு பழங்குடியினர் (Denotified Tribes) என்று அழைக்கப்பட்டனர். இதன் காரணமாகவே இந்தச் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஆகஸ்ட் 31-ஐ தங்களது 'விடுதலை நாள்' அல்லது 'இரண்டாவது சுதந்திர தினம்' என்று கொண்டாடுகின்றனர்.

இந்தியாவில் இந்தியாவில் தீண்டத்தகாதவையாக கருதப்பட்ட, நாடோடி மற்றும் அரை-நாடோடி சமூகங்களின் எண்ணிக்கை தொடர்பாக அரசுத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் வெவ்வேறு எண்ணிக்கைகள் காணப்படுகின்றன. நாட்டில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான சமூகங்கள் உள்ளன. குஜராத்தில் தீண்டத்தகாதவையாக கருதப்பட்ட 13 பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

ஆனால், இந்தச் சமூகங்களுக்கு ஆகஸ்ட் 31 ஏன் முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்ள, காலச் சக்கரத்தில் சுமார் ஒன்றரை நூற்றாண்டு பின்னோக்கிச் சென்று பார்க்க வேண்டும்.

'குற்றப் பழங்குடியினர்' என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள்

டாக்டர்.கணேஷ் தேவி

பட மூலாதாரம், Pavan Jaishwal

படக்குறிப்பு, டாக்டர்.கணேஷ் தேவி

வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, நாடோடி வாழ்க்கை வாழ்ந்த சமூகங்களைக் கண்காணிப்பது பிரிட்டிஷ் அரசுக்கு கடினமாக இருந்தது.

இந்த மக்கள் ஓர் இடத்தில் நிரந்தரமாக வசிக்கவில்லை. அவர்களிடம் பெரும்பாலும் நிலம் அல்லது பிற அசையாச் சொத்துகள் இல்லை. அவர்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பல ஆண்டுகளாக நாடோடி சமூகங்களுடன் இணைந்து அவர்களுக்காகப் பணியாற்றி வரும் மொழியியலாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான டாக்டர் கணேஷ் தேவி, பிபிசியிடம் பேசுகையில், "இந்த மக்கள் எவ்வளவு எண்ணிக்கையில் இருந்தார்கள், எங்கு வசித்தார்கள், என்ன வேலை செய்தார்கள், அவர்களுடைய வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பது குறித்து ஆங்கிலேய அரசுக்கு எதுவுமே தெரியாது. அதனால், அவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் பணியை ஆங்கிலேய அதிகாரியான வில்லியம் ஸ்லீமனிடம் ஒப்படைத்தனர்."

அவரின் அறிக்கைகள் உள்ளிட்ட அரசின் பல ஆய்வுகளின் அடிப்படையில், பிரிட்டிஷ் அரசு 1871ஆம் ஆண்டு 'குற்றப் பழங்குடியினர் சட்டம்' (Criminal Tribes Act) என்ற சட்டத்தை இயற்றியது.

இந்தச் சட்டத்தின் கீழ் பல சமூகங்கள் 'கிரிமினல் டிரைப்ஸ்' அதாவது 'குற்றப் பழங்குடியினர்' என்று அறிவிக்கப்பட்டனர்.

சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களை, பிரிட்டிஷ் அரசு 'செட்டில்மென்ட்' என்று அழைக்கப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் தங்க வைக்கத் தொடங்கியது.

இந்தச் தங்குமிடங்கள் வழக்கமான சிறையிலிருந்து வேறுபட்டதாக இருந்தது. ஆனால், அங்கு வசித்த மக்களின் நடமாட்டத்திலும், அன்றாட வாழ்க்கை மீதும் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. அவர்களுடைய வருகைப் பதிவு ஒரு நாளில் பலமுறை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சமூகங்களைச் சேர்ந்த மக்களைக் கட்டுப்படுத்துவதற்கு காவல்துறைக்கு விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.

நரோடா செட்டில்மென்ட்

வசியாகத்பாய் காரங்க்

பட மூலாதாரம், Shrenik Garage

படக்குறிப்பு, வசியாகத்பாய் காரங்க்

ஆமதாபாத்தின் நரோடா பகுதியில் இதுபோன்ற ஒரு தங்குமிடம் அமைக்கப்பட்டிருந்தது.

சாரா என்ற சமூகத்தைச் சேர்ந்த வசியாகத்பாய் காரங்க், தற்போது உயிருடன் இல்லை. அவர் தனது நினைவுக்குறிப்புகளில், "ஆமதாபாத்தின் நரோடா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இதுபோன்ற ஒரு சிறையில் எங்கள் சமூகத்தினரை பிடித்து அடைத்து வைத்திருந்தார்கள். 1920களில் ஆமதாபாத்தில் ஜவுளி ஆலைகள் ஆதிக்கம் செலுத்தின. அப்போது ஆமதாபாத்தில் ஒரே ஒரு பாலம்தான் இருந்தது. அதை நாங்கள் அப்போது 'லக்கடியா பாலம்' என்று அழைத்தோம். அதுதான் இன்றைய எலிஸ் பாலம் அல்லது சுவாமி விவேகானந்தர் பாலம்."

"இந்தச் சிறையிலிருந்து எங்களைக் கட்டி அந்தப் பாலத்துக்கு அழைத்துச் செல்வார்கள். அங்கு நாங்கள் பருத்தி அல்லது உப்பு மூட்டைகளைத் தூக்கும் வேலை செய்தோம். பாலத்தின் மறுபுறத்திலிருந்து இந்தப் புறத்திற்கு மூட்டைகளைத் தூக்கி வந்தோம். அதற்காக எங்களுக்கு கூலி வழங்கப்பட்டது."

வசியாகத்பாய் சில காலத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இருப்பினும், அவரது நினைவுகள் பல திரைப்படத் தயாரிப்பாளர்களாலும், எழுத்தாளர்களாலும் படைப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தனது தாத்தாவின் நினைவுகளைப் பற்றி பேசிய அவரது பேரன் ஷ்ரேணிக் காரங்க் கூறுகையில், "என் தாத்தா எப்போதும் செட்டில்மென்ட் பற்றிய விஷயங்களை எங்களிடம் கூறுவார். பெண்களும் அங்கேயே வசித்ததாகவும் அவர் கூறுவார். ஒரு திறந்த வெளியில் அவர்களுக்கு குடிசைகள் வழங்கப்பட்டிருந்தன. அவர்கள் உணவைத் தாங்களே சமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது."

"என் தாத்தா கூலி வேலை செய்து சம்பாதித்த பணத்தில்தான் பாட்டி சமையல் செய்வார். அதாவது, அது சிறையாக இருந்தாலும், அங்கு இலவச உணவு வழங்கப்படவில்லை என்று என் தாத்தா எங்களிடம் கூறுவார்."

குஜராத்

பட மூலாதாரம், Kushal Batunge

ஆண்கள் பல்வேறு வகையான வேலைகளைச் செய்வதற்காக வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆமதாபாத்தில் ஜவுளி ஆலைகள் மட்டுமின்றி, கட்டுமானப் பணிகளிலும், பிற கூலி வேலைகளிலும் இந்தச் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

வசியாகத்பாயின் பதிவுகள், செட்டில்மென்ட்டில் வசித்த குடும்பங்களின் வாழ்வாதாரம் ஆண்களின் கூலி உழைப்பைச் சார்ந்திருந்ததையும், பெண்களும் குழந்தைகளும் செட்டில்மென்ட்டிலேயே வசித்ததையும் காட்டுகின்றன.

இவ்வாறு, அந்தச் சட்டம் ஒரு தனிநபரின் நடமாட்டத்தின் மீது மட்டுமே கட்டுப்பாடு விதிக்கவில்லை. அது முழுக் குடும்ப, சமூக வாழ்க்கையை பாதித்தது.

இன்றைய ஆமதாபாத்தின் சாராநகர் மற்றும் கைகாடிவாஸ் ஆகியவை, இந்தச் செட்டில்மென்ட்டில் வசித்த இரண்டு முக்கிய சமூகங்களின் பெரிய குடியிருப்புகள் உருவாகிய பகுதிகளாகும். இருப்பினும், அவர்களுக்கான இந்த 'சிறை' சுதந்திரத்திற்குப் பிறகும் தொடர்ந்தது.

1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்திரம் பெற்றது. ஆனால் 'குற்றப் பழங்குடியினர் சட்டம்' உடனடியாக ரத்து செய்யப்படவில்லை.

இதனால், பிரிட்டிஷ் ஆட்சி முடிவடைந்த பிறகும் இந்தச் சமூகங்களைச் சேர்ந்த மக்களின் செட்டில்மென்ட் வாழ்க்கை தொடர்ந்தது.

வித்தியாசம் என்னவென்றால், இப்போது இந்த அமைப்பு இந்திய நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டது.

இதுபோன்ற செட்டில்மென்ட்கள் ஆமதாபாத் தவிர உத்தரப் பிரதேசத்தின் முராதாபாத், கர்நாடகாவின் கதக், மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளிலும் இருந்தன.

1952 ஆகஸ்ட் 31 அன்று 'குற்றப் பழங்குடியினர் சட்டம்' ரத்து செய்யப்பட்டது.

மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் இதுபோன்ற ஒரு செட்டில்மென்ட்டின் கம்பி வேலியை வெட்டிய சம்பவம், இந்தச் சமூகங்களின் நினைவில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகும் இந்தச் சமூகத்தினரை கண்காணிக்கும் நடைமுறை முழுமையாக முடிவுக்கு வரவில்லை. பல்வேறு மாநிலங்களில் 'தொடர் குற்றவாளிகள்' (habitual offenders) தொடர்பான சட்டங்கள் அமலுக்கு வந்தன.

ஆகஸ்ட் 31 'இரண்டாவது சுதந்திர தினமாக' எப்படி மாறியது?

குஜராத்

விடுவிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் ஆகஸ்ட் 31 அன்று தங்களது விடுதலை நாளாக நினைவுகூருகின்றனர்.

சாரா சமூகத்தின் தலைவரும் சமூகச் செயற்பாட்டாளருமான ஆதிஷ் இந்த்ரேகர் பேசுகையில், "ஆகஸ்ட் 15-க்கு நாங்கள் மிகுந்த மரியாதை அளிக்கிறோம். அன்று கொடியேற்றி, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். அதே நேரத்தில், ஆகஸ்ட் 31 எங்களது இரண்டாவது சுதந்திர தினமாகவும் கொண்டாடி வருகிறோம்."

ஆகஸ்ட் 31 கொண்டாட்டத்துடன் சாராநகரின் வரலாறும் இணைந்துள்ளது.

'பெயிண்டட் வேர்ட்ஸ்' என்ற புத்தகத்தில் டாக்டர் கணேஷ் தேவி எழுதுகையில், "1998ஆம் ஆண்டு எழுத்தாளர் மகாஷ்வேதா தேவி சாராநகருக்குச் சென்றிருந்தார். அங்கிருந்த மாணவர்கள் ஒரு நூலகம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 1998 ஆகஸ்ட் 31 அன்று அந்த நூலகம் திறந்து வைக்கப்பட்டது." என்று குறிப்பிட்டுள்ளார்.

சாராநகரின் சமூகச் செயற்பாட்டாளர் தக்சிண் பஜ்ரங்கே கூறுகையில், "அப்போது சாராநகரின் இளைஞர்கள் 'புதன்' என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தினர். அதில் நாடோடி சமூகங்கள் மற்றும் அவர்களின் சுதந்திரம் தாமதமானது பற்றிய விஷயங்கள் பேசப்பட்டன."

"அதன் பிறகே, நாடு முழுவதும் ஆகஸ்ட் 31 விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது."

இருப்பினும், விடுதலைக்குப் பிறகு உண்மையில் இந்தச் சமூகங்களுக்கு என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையும் புரிந்துகொள்வது அவசியம்.

அங்கீகரிக்கப்படாத, நாடோடி மற்றும் அரை-நாடோடிப் பழங்குடியினரின் பிரச்னைகள், அவர்களின் 'வரலாற்று ரீதியான களங்கத்துடன்' மட்டும் நின்றுவிடுவதில்லை.

சுதந்திரத்திற்குப் பிறகு அவர்களுடைய நிலை மற்றும் பிரச்னைகளை ஆய்வு செய்வதற்காக இரண்டு முக்கியமான ஆணையங்கள் அமைக்கப்பட்டன. முதலாவது பாலகிருஷ்ண ரேங்கே தலைமையிலான 'ரேங்கே ஆணையம்'. அதற்குப் பிறகு 'இதாதே ஆணையம்' அமைக்கப்பட்டது.

இரண்டு ஆணையங்களும் விடுவிக்கப்பட்ட, நாடோடி மற்றும் அரை நாடோடி பழங்குடியின மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி மற்றும் சமூக-பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைப் பரிந்துரைத்தன.

குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் இந்தச் சமூகங்களுக்காக டீ-நோட்டிஃபைட் டிரைப்ஸ் அதாவது டிஎன்டி வாரியங்களை அமைத்துள்ளன. அவற்றில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டில் கல்வி பயில்வது போன்றவற்றுக்கான பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆனால், ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பு சுமத்தப்பட்ட 'குற்றவாளி' என்ற 'சமூக களங்கம்' இன்று எந்த அளவுக்கு அகற்றப்பட்டுள்ளது என்பது இந்தச் சமூகங்களுக்கு இன்னும் முக்கியமான பிரச்னையாகவே உள்ளது.

அதனால்தான் ஆகஸ்ட் 31 அவர்களுக்கு வெறுமனே கடந்த காலத்தை நினைவுகூரும் நாள் அல்ல.

1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றது. ஆனால் சில இந்தியர்களைப் பொறுத்தவரை, தங்களது அடையாளத்தையும் சுதந்திரத்தையும் மீட்டெடுப்பதற்கான போராட்டம் அதற்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து தான் முடிவுக்கு வந்தது என்பதை இந்த நாள் நினைவூட்டுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு