நேபாளத்தில் காணாமல் போன ஆஸ்திரேலியத் தமிழ்க் குடும்பம் - தகவலுக்காக காத்திருக்கும் உறவினர்கள்

நேபாளம், இலங்கை, ஆஸ்திரேலியா, வெள்ளப்பெருக்கு, இயற்கை பேரிடர், நேபாள வெள்ளப்பெருக்கு
    • எழுதியவர், பரணி
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளுக்கு மத்தியில், சுற்றுலாவுக்காக சென்ற இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் ஒன்று தொடர்பற்றுப் போயுள்ளது.

சிட்னியைத் வசிப்பிடமாகக் கொண்ட பொறியியலாளர் சந்திரசேகரன் முரளிதரன், அவரது மனைவி ஷைலஜா மற்றும் அவர்களது இரு மகன்களான அஷ்வின், ஆருஷ் உள்ளிட்டோர் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளதில் காணாமற்போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையிலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ள அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் பெரும் கவலையில் உள்ளனர்.

சுற்றுலாப் பயணமாக கைலாஷ் மானசரோவர் மற்றும் நேபாளம் சென்றிருந்த இந்தக் குடும்பம், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் அஞ்சுகின்றனர். குறிப்பாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சில பகுதிகளுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குடும்பத்தினர் கைலாஷ் மானசரோவர் நோக்கிய புனித யாத்திரையில் பங்கேற்றிருந்ததுடன், தனியார் சுற்றுலா நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட குழுவுடன் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

குடும்ப உறுப்பினர்களின் தகவலின்படி, திபெத்–நேபாள எல்லைக்கு அருகிலுள்ள குடிவரவு சோதனைச் சாவடியை நோக்கிப் பயணிக்க குழுவினர் தயாராகிக் கொண்டிருந்தபோது, அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

நேபாளம், இலங்கை, ஆஸ்திரேலியா, வெள்ளப்பெருக்கு, இயற்கை பேரிடர், நேபாள வெள்ளப்பெருக்கு
படக்குறிப்பு, நேபாளத்தில் இருந்து முரளிதரன் இறுதியாக அனுப்பிய பயணப் புகைப்படம்

முரளிதரன், ஷைலஜா, அஷ்வின் மற்றும் ஆருஷ் ஆகியோர் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் குடும்பத்தினர் தொடர்ந்து காத்திருக்கின்றனர்.

மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் பேரழிவுக்குள்ளான பகுதிகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குடும்பத்தினர் "கவலையுடனும், அதேவேளை நம்பிக்கையுடனும்" இருப்பதாக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் முரளிதரனின் சகோதரி பூரணி தெரிவிக்கிறார்.

நேபாளத்தில் இருந்து முரளிதரன் குடும்பம் இறுதியாக புதன்கிழமை (26) காலை 7 மணியளவில் தம்முடன் காணொளி மூலமாக நேரடியாக உரையாடியதாகவும், அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தமது பயணத்தை மேற்கொள்ள தயாராக இருந்ததாகவும் பிபிசி தமிழிடம் பூரணி கூறினார்.

நேபாளம், இலங்கை, ஆஸ்திரேலியா, வெள்ளப்பெருக்கு, இயற்கை பேரிடர், நேபாள வெள்ளப்பெருக்கு
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

நேபாளத்துக்கு செல்வதற்கு இரு நாட்களுக்கு முன்னர் தமது வீட்டுக்கு வந்த முரளிதரன் குடும்பத்தினர், தாங்கள் செல்லவுள்ள சுற்றுலாப் பயணம் குறித்த மகிழ்வை தம்முடன் பகிர்ந்து கொண்டதையும், அவர்களுக்கு தேவையான மருத்துவ முன்னேற்பாடுகளை முரளிதரனின் மைத்துனரான மருத்துவர் ஸ்ரீகரன் மேற்கொண்டதையும் பூரணி நினைவுகூர்ந்தார்

நேபாளத்தில் நடந்த விபரீதம் குறித்து, முரளிதரன் குடும்பத்தை அழைத்துச் சென்ற நிறுவனமே தமக்குத் முதலில் தகவல் தெரிவித்ததாக பூரணி கூறினார்.

தகவல் அறிந்ததும் தாம் உடனடியாக ஆஸ்திரேலிய அரசாங்கத்துக்குத் தகவல் தெரிவித்ததாகவும், தொடர்ந்து ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஷைலஜாவின் தங்கையான வைஷ்ணவி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

புதன்கிழமை (26) காலை ஷைலஜா தம்முடன் தொலைபேசியில் உரையாடிவிட்டு, நேபாளப் பயணத்தின் புகைப்படங்களை அனுப்பியதாகவும் வைஷ்ணவி கூறினார்.

காலை உணவை முடித்துவிட்டு, குடிவரவு மற்றும் குடியகல்வுப் பகுதிக்குச் செல்லத் தயாராக இருப்பதாக ஷைலஜா கூறியதாகவும், அதுவே புதன்கிழமை காலை இருவருக்கும் இடையே நடந்த கடைசி உரையாடல் என்றும் வைஷ்ணவி தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.

நேபாளம், இலங்கை, ஆஸ்திரேலியா, வெள்ளப்பெருக்கு, இயற்கை பேரிடர், நேபாள வெள்ளப்பெருக்கு
படக்குறிப்பு, வரதராஜன் - முரளிதரனின் நெருங்கிய உறவினர்

இலங்கை, யாழ்ப்பாணத்தில் வசிக்கும் முரளிதரனின் நெருங்கிய உறவினரான வரதராஜன், சிறு குழந்தையாக முரளிதரன் இருந்ததில் இருந்து அவரைத் தாம் தூக்கி வளர்த்ததாகவும், இது தனக்கு தாங்கிக்கொள்ள முடியாத துயரத்தை தந்துள்ளதாகவும் கூறினார்.

நேபாளம் செல்வதற்கு முன்னர் தம்முடன் தொலைபேசியில் உரையாடும்போது, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமது நண்பர்களான தமிழகத்தைச் சேர்ந்த குடும்பங்களுடன் தாம் நேபாளம் செல்வதாக வரதராஜனுக்கு முரளிதரன் கூறியுள்ளார்.

நேபாளத்தில் அவர்கள் இறுதியாகத் தங்கியிருந்த ''கைலாஷ்'' என்ற தங்கும் விடுதியை தொடர்புகொள்ளமுடியவில்லை எனவும், ஆனால் குறித்த விடுதி பேரிடரில் சேதமடையவில்லை எனவும் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக வரதராஜன் கூறினார்.

பேரிடர் சமயம் அவர்கள் குறித்த தங்கும் விடுதியில் இருந்திருந்தால் அவர்களுக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை எனவும், ஆனால் குறித்த சமயம் அவர்கள் எங்கிருந்தார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், முரளிதரன் குடும்பத்துடன் சேர்ந்து தொடர்பு துண்டிக்கப்பட்ட மற்றொரு ஆஸ்திரேலிய தமிழ்க் குடும்பத்தைத் தேடி நேபாளத்துக்கு நேரடியாகச் சென்றுள்ளதாக முரளிதரனின் சகோதரி பூரணி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அவர்களிடமிருந்து தகவல் கிடைக்கும் எனக் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து, குறைந்தது 41 ஆஸ்திரேலியர்களின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை என்று ஆஸ்திரேலிய அரசின் ஊடகமான ஏபிசி தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு