வேட்புமனு தாக்கலின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் முரண்பாடுகள் இருப்பதாகக் கோரி தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறை பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு உதயநிதி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்துக்கும் 2026 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்துக்கும் இடையில் முரண்பாடுகள் உள்ளதாகக் கூறி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த குமரவேல் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தனது மனுவில், '2021 ஆம் ஆண்டு உதயநிதி தாக்கல் செய்த வேட்புமனுவில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் 7.36 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால், 2026 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில் இதுதொடர்பாக எந்த விவரங்களும் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.
''உதயநிதியின் மனைவி கிருத்திகா, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் 2.63 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய விளக்கங்கள் எதுவும் இல்லை' என மனுவில் குமரவேல் கூறியுள்ளார்.
மேலும், தனியார் நிறுவனத்துக்கு 11 கோடியே 6 லட்ச ரூபாயைக் கடன் கொடுத்துள்ளதாக 2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில் உதயநிதி தெரிவித்துள்ளதாகக் கூறும் குமரவேல், 'ஆனால், 2026 ஆம் ஆண்டு தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் இதுதொடர்பான விவரங்களில் முரண்பாடுகள் உள்ளன' என்கிறார்.
'உதயநிதியின் வருமானம் 2020 ஆம் ஆண்டில் 2 கோடி ரூபாயாக இருந்துள்ளது. தற்போது 10.98 கோடியாக உயர்ந்துள்ளது. வருமானம் அதிகரித்தது குறித்து அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை' என மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேட்பாளர்கள் தங்களின் சொத்துகள் குறித்து தவறான தகவல்களைத் தெரிவிப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது எனக் கூறியுள்ள குமரவேல், 'இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு வருமான வரித்துறை தலைமை இயக்குநர் (புலனாய்வு) மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறைக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் புதன்கிழமையன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, உதயநிதி ஸ்டாலினின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை வரும் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசனுக்கு உத்தரவிட்டது.