நேரலை, பிகாரில் பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சௌத்ரி முதல்வரானார்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. பிகாரில் பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சௌத்ரி முதல்வரானார்

    பிகாரின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட சாம்ராட் சௌத்ரி

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, சாம்ராட் சௌத்ரி

    பிகாரின் புதிய முதலமைச்சராக சாம்ராட் சௌத்ரி பதவியேற்றுக் கொண்டார். அவர் அந்த மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முதல் முதலமைச்சர் ஆவார்.

    அவருடன், ஜனதா தளம் (ஐக்கிய) கட்சியைச் சேர்ந்த விஜய் குமார் சௌத்ரி மற்றும் விஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்தப் பதவியேற்பு விழாவில் நிதிஷ் குமாரும் கலந்து கொண்டார்.

    பதவியேற்பு விழாவிற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய விஜய் குமார் சௌத்ரி, "நிதிஷ் குமார் என் மீது நம்பிக்கை வைத்தார், அதன் விளைவுதான் இது. எங்களின் புதிய அரசாங்கமும் அவர் பிகாரை வழிநடத்திச் சென்ற அதே பாதையில்தான் பயணிக்கும்," என்று கூறினார்.

    விஜேந்திர பிரசாத் யாதவ் பேசுகையில், "நாங்கள் நிதிஷ் குமாரின் பணிகளை முன்னோக்கி எடுத்துச் செல்வோம்," என்றார்.

    விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மான்ஜி, "புதிய முதலமைச்சர் நியமனத்தால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்று நான் என்னவாக இருக்கிறேனோ அதற்குக் காரணம் நிதிஷ் குமார் தான். அவர் 2014-இல் என்னை முதலமைச்சராக்கினார். அவரால் தான் மகா தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சரானார்," என்று கூறினார்.

    சாம்ராட் சௌத்ரி முதலமைச்சராவதற்கான வாய்ப்பு நிதிஷ் குமாரின் ராஜினாமாவால் உருவானது. நிதிஷ், சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார்.

  2. 'தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களை பாதிக்கும்' - ப.சிதம்பரம்

    தொகுதி மறுவரையறை

    பட மூலாதாரம், Getty Images

    தொகுதி மறுவரையறையால் நாடாளுமன்றத்தில் தென்மாநில எம்.பி.க்களின் விகிதாச்சாரம் 24.3 சதவீதத்தில் இருந்து 20.7 சதவீதமாக குறையக்கூடும் என்று காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

    கோவை தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொகுதி மறுவரைறைக்காக நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதை எதிர்க்கின்றோம் என்றார்.

    மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்திவிட்டு பின்னர் தொகுதி மறுவரையறை செய்வது என்பது மாயை என்று கூறிய அவர்," அவ்வாறு 50 சதவீதம் உயர்த்தும் போது தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்தாலும், தொகுதி மறுவரையறைக்குப் பின் 46 ஆக குறையும் என்றார்.

    அதேநேரத்தில், உத்தரபிரதேசத்தில் தற்போதுள்ள 80 மக்களவை தொகுதி 120 தொகுதிகளாக உயரும் எனவும், மறுவரையறைக்கு பின்பு அதுவே 140 ஆக உயரும் என்று கூறிய சிதம்பரம், இந்த தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களை மிகமிக பாதிக்கும் என்றார்.

  3. அந்தமான் கடலில் படகு கவிழ்ந்தது - 250 பேரின் நிலை என்ன?

    இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்த படகு

    பட மூலாதாரம், AFP via Getty Images

    ஐக்கிய நாடுகளின் அகதிகள் மற்றும் குடியேற்ற முகமைகளின் கூற்றுப்படி, அந்தமான் கடலில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட சுமார் 250 ரோஹிஞ்சா மற்றும் வங்கதேச மக்கள் மாயமாகியுள்ளனர்.

    அந்த இழுவைப்படகு (மீன்பிடி படகு) வங்கதேசத்தில் இருந்து மலேசியாவிற்கு சென்று கொண்டிருந்தது. பலத்த காற்று, கொந்தளிப்பான கடல் மற்றும் அதிக பயணிகள் காரணமாக படகு மூழ்கியதாக அந்த முகமைகள் தெரிவிக்கின்றன.

    ஏப்ரல் 9-ஆம் தேதி படகில் இருந்த ஒன்பது பேரை தனது கப்பல்களில் ஒன்று மீட்டதாக ஏஎஃப்பி (AFP) செய்தி முகமையிடம் வங்கதேச கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இருப்பினும், படகு எப்போது கவிழ்ந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

    மியான்மரில் சிறுபான்மை சமூகமான ரோஹிஞ்சாக்கள், 2017-இல் நடந்த வன்முறை ஒடுக்குமுறைக்குப் பிறகு பெருமளவில் வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றனர்.

    வங்கதேசத்தில் உள்ள மோசமான நிலைமைகள் காரணமாக, பல ரோஹிஞ்சாக்கள் தாங்கள் பாதுகாப்பான இடமாகக் கருதும் மலேசியாவை அடைய அபாயகரமான கடல் பயணங்களை மேற்கொள்ள முயல்கின்றனர்.

    தப்பிப் பிழைத்தவர்களில் ஒருவரான ரஃபிகுல் இஸ்லாம், ‘தாங்கள் மீட்கப்படுவதற்கு முன்பு சுமார் 36 மணி நேரம் கடலில் மிதந்து கொண்டிருந்ததாகக்’ கூறினார்.

    40 வயதான ரஃபிகுல் இஸ்லாம், மலேசியாவில் வேலை கிடைக்கும் என்ற வாக்குறுதியே இந்தப் பயணத்தை மேற்கொள்ளத் தன்னைத் தூண்டியதாகக் கூறினார்.

  4. 1993-க்குப் பிறகு லெபனான்- இஸ்ரேல் நேரடி பேச்சுவார்த்தை

    பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனான்- இஸ்ரேல் நேரடி பேச்சுவார்த்தை

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இதை ஒரு ‘வரலாற்று முக்கியத்துவம் கொண்ட வாய்ப்பு’ என்றார்.

    பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே நேரடி ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

    இந்த முயற்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, இதன் நோக்கம் இஸ்ரேலுக்கும் இரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலாவிற்கும் இடையே நடந்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதாகும்.

    பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இதை ஒரு "வரலாற்று முக்கியத்துவம் கொண்ட வாய்ப்பு" என்று விவரித்தார். இது ஹெஸ்பொலாவின் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு படியாக அமையும் என்று கூறினார்.

    அமெரிக்கா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இரு தரப்பினரும் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது, இருப்பினும் அதற்கான நேரமும் இடமும் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஹெஸ்பொலாவைக் குறிப்பிட்டு, அரசு சாரா ஆயுதக் குழுக்கள் அனைத்தும் ஆயுதங்களை கைவிடுவதை தாங்கள் விரும்புவதாக இஸ்ரேல் தெரிவித்தது.

    இதற்கிடையில், லெபனான் ஒரு போர்நிறுத்தத்தையும், நாட்டில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியைச் சரிசெய்ய உறுதியான நடவடிக்கைகளையும் கோரியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே முறையான ராஜதந்திர உறவுகள் இல்லை. இந்த அளவிலான நேரடிப் பேச்சுவார்த்தைகள் 1993இல் நடைபெற்றன.

    மார்ச் 2 அன்று லெபனானில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை தொடங்கியதில் இருந்து 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின், இரான் மீதான தாக்குதல்களுக்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை தொடங்கியது.

    செவ்வாயன்று (ஏப்ரல் 14), இரு தரப்பினரும் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது, இஸ்ரேல் மற்றும் லெபனானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இஸ்ரேலிய துருப்புகள் மீது நடத்தப்பட்ட குறைந்தது 24 தாக்குதல்களுக்கு ஹெஸ்பொலா பொறுப்பேற்றது.

    2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் காஸா போரின் போது இஸ்ரேலும் ஹெஸ்பொலாவும் மோதிக்கொண்டன. இந்நிலையில், ஹெஸ்பொலாவை பலவீனப்படுத்துவதையும் அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டு தனது தாக்குதல் இருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.

  5. ‘தெஹ்ரானில் வெடிப்புச்சத்தங்கள்’- இரானிய ஊடகங்கள்

    ராணுவ நடவடிக்கையில் அழிக்கப்பட்ட ஒரு கட்டிடம் (கோப்புப் படம்)

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, தெற்கு தெஹ்ரானில் ராணுவ நடவடிக்கையில் அழிக்கப்பட்ட ஒரு கட்டிடம் (கோப்புப் படம்)

    தெஹ்ரானில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக இரானிய ஊடகங்களை மேற்கோள் காட்டி பிபிசி உருது சேவை தெரிவித்துள்ளது.

    இரானின் தலைநகரான தெஹ்ரானின் 10-வது மாவட்டத்தின் புரட்சிகர காவல் படையின் தளபதி முகமது பலிதே, ஒரு காணொளிச் செய்தியில், "தேசவிரோத சக்திகள் ஒரு சிறு வெடிப்பை" ஏற்படுத்தியதாகக் கூறினார். இந்த வெடிப்புக்குப் பின்னால் யார் இருந்தார்கள் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

    நகரத்தில் நிலைமை 'கட்டுப்பாட்டில்' இருப்பதாக அவர் கூறுகிறார்.

    இந்தக் காணொளிச் செய்தியைத் தொடர்ந்து, புரட்சிகர காவல் படையுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி முகமை, 'திரவமாக்கப்பட்ட வாயுவால் செய்யப்பட்ட இரண்டு வெடிபொருட்களால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக’ ஒரு தனி அறிக்கையில் கூறியது.

    அறிக்கைகளின்படி, இந்த வெடிப்பில் மூன்று பேர் லேசாகக் காயமடைந்தனர். அதேநேரத்தில் மூன்று வீடுகளின் ஜன்னல்கள் உடைந்தன மற்றும் இரண்டு வாகனங்கள் சேதமடைந்தன.

  6. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் இன்றைய (ஏப்ரல் 14) நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம்.

    இன்று பிற்பகல் வரையிலும் அண்மைச் செய்திகளை தொகுத்து அளிப்பவர் சிராஜ்.

  7. 'அடுத்த இரண்டு நாட்களில் அமெரிக்கா - இரான் பேச்சு': டிரம்ப்

    அமெரிக்காவும் இரானும் இடையிலான பேச்சுவார்த்தைகள் “அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் தொடங்கலாம்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    ''அடுத்த இரண்டு நாட்களில் ஏதாவது முன்னேற்றம் நடக்கலாம். மேலும், நாம் பாகிஸ்தான் செல்ல அதிகமாக சாத்தியம் உள்ளது” என்று அவர் நியு யார்க் போஸ்ட் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

    முன்பு பாகிஸ்தானில் நடந்த அமெரிக்கா - இரான் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    'அடுத்த இரண்டு நாட்களில் அமெரிக்கா - இரான் பேச்சு': டிரம்ப்

    பட மூலாதாரம், EPA

  8. அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடரும் - இரான் அதிபர்

    அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடரும் - இரான் அதிபர்

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர இரான் தயாராக இருப்பதாகவும், பிரச்னைகளை தீர்ப்பதற்கு ராஜீய முறையே விரும்பத்தக்க வழி என்றும் இரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்துள்ளார்.

    பிரான்ஸ் அதிபர் மக்ரோனுடனான உரையாடலில் அவர் இதைக் கூறியதாக, பல இரானிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    சர்வதேச சட்டங்களையும் விதிகளையும் கடைப்பிடிக்குமாறு அமெரிக்காவை ஐரோப்பா வலியுறுத்த வேண்டும் என்றும் பெஷெஷ்கியன் கூறினார்.

  9. விஜய் பரப்புரை கூட்டத்தில் பலர் மயக்கம்

    விஜய் பரப்புரை கூட்டத்தில் பலர் மயக்கம்

    பட மூலாதாரம், TVK

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று கோவை வந்தடைந்தார்.

    அப்போது விஜயை வரவேற்க காத்திருந்த சூலூர் வேட்பாளர் திடீரென மயக்கமடைந்தார். பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

    அதேபோல, திருப்பூரில் பரப்புரை கூட்டத்தில் காத்திருந்தவர்களில் குறைந்தது 10 பேர் மயங்கினர். அங்கிருந்த அவசர ஊர்திகளில் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

  10. பிகார் பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக சாம்ராட் சௌத்ரி தேர்வு

    பிகாரில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சௌத்ரி தேர்வு

    பட மூலாதாரம், ANI

    பிகார் முதலமைச்சர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் ராஜிநாமா செய்துள்ளார். தனது ராஜிநாமாவை ஆளுநரிடம் சமர்பித்துள்ளார்.

    இந்தநிலையில் பாஜகவின் சாம்ராட் சௌத்ரி பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    சாம்ராட் சௌத்ரி தற்போது பிகாரின் துணை முதல்வராக உள்ளார்.

  11. 'பதற்றத்தை அதிகப்படுத்தும்' - அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்

    பதற்றத்தை அதிகப்படுத்தும் - அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்

    பட மூலாதாரம், EPA-EFE/Shutterstock

    இரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை "ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது" என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானில் அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த ஒரு நாளுக்குப் பிறகு, திங்களன்று இந்த முற்றுகை நடைமுறைக்கு வந்தது.

    இந்த முற்றுகை "பதற்றத்தை அதிகப்படுத்தும் மற்றும் ஏற்கனவே பலவீனமாக உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் சீர்குலைக்கும்" என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் எச்சரித்துள்ளார்.

  12. தொகுதி மறுவரையறை: ஸ்டாலின் - அண்ணாமலை கூறியது என்ன?

    மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

    தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை விமர்சித்துள்ளார். அதற்கு அண்ணாமலை பதில் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளியில், தொகுதி மறுவரையறை குறித்த அரசியலமைப்பு சட்டத் திருத்தத்துக்காக ஏப்ரல் 16 அன்று “வலுக்கட்டாயமாக” நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படப் போகும் மாநிலங்களின் முதலமைச்சர்களை சென்னைக்கு வரவழைத்து கூட்டுக் குழு கூட்டம் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

    அவசரஅவசரமாக தொகுதி மறுவரையறையை செய்ய நினைப்பது மத்திய அரசின் “அப்பட்டமான ஜனநாயக விரோத செயல்” என்றும், சட்டத்திருத்தம் குறித்து மத்திய அரசு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என்றும் ஸ்டாலின் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

    ”வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்கும் விதமாகவும் தமிழ்நாட்டுக்கு எதிராகவும் ஏதேனும் நடந்தால் தமிழ்நாட்டில் உள்ள நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். தமிழ்நாடு ஸ்தம்பிக்கும். கடுமையாக எதிர்ப்பை தெரிவிக்கும். மக்கள் தெருக்களில் இறங்கி போராடுவர்.” எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    ”இதுவரை பார்க்காத தமிழகத்தை பார்ப்பீர்கள், 1950 மற்றும் 1960களில் இருந்த திமுகவை பார்க்க நேரிடும். நான் உங்களை எச்சரிக்கிறேன். இதனை மிரட்டலாக நினைத்தாலும் பரவாயில்லை.” என்று ஸ்டாலின் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், மு.க.ஸ்டாலினின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எதிர்வினையாற்றியுள்ளார்.

    செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, “மக்களவையில் ஏற்கெனவே உள்ள 543 இடங்களில் மகளிர் இடஒதுக்கீடு 33% என்பதை அப்படியே செயல்படுத்த முடியாது என்பதால், அந்த இடங்களை 816 ஆக உயர்த்தி செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தென் மாநிலங்கள் பாதிக்காத வகையில்தான் பிரதமர் தொகுதி மறுவரையறை செய்கிறார். ஏனெனில், மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யப்படவில்லை. மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் என்பது 31 ஆக குறையும். எனவே அவ்வாறு செய்யவில்லை. முதலமைச்சர் ஸ்டாலினின் எச்சரிக்கை ஏற்புடையதல்ல.” என தெரிவித்துள்ளார்.

  13. நொய்டாவில் தொழிலாளர்கள் போராட்டம் குறித்து ராகுல் கூறியது என்ன?

    ராகுல் காந்தி

    பட மூலாதாரம், Anindito Mukherjee/Bloomberg via Getty Images

    படக்குறிப்பு, ராகுல் காந்தி

    உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் தொழிற்பகுதியில் நடைபெற்ற போராட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எதிர்வினையாற்றியுள்ளார்.

    தொழிலாளர்கள் ரூ. 20,000 ஊதியம் கோருவது பேராசை அல்ல என்றும் அது அவர்களின் உரிமை என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், ”நேற்று நொய்டா தெருக்களில் நடந்தது, நாட்டில் தங்களின் குரல் நிராகரிக்கப்பட்ட தொழிலாளர்கள் விடுத்த கடைசி அறைகூவல்” என பதிவிட்டுள்ளார்.

    மேலும், “நொய்டாவில் பணிபுரியும் ஒரு தொழிலாளர் மாதம் ரூ. 12,000 சம்பாதிக்கிறார், இதில் வாடகை ரூ. 4,000-7,000 சென்றுவிடும். ஆண்டு வருமான உயர்வாக ரூ.300-ஐ பெறும்போது, வீட்டு உரிமையாளர் வாடகையை ரூ. 500 உயர்த்திவிடுவார்.” என பதிவிட்டுள்ளார்.

    “ஊதியத்தை உயர்த்தாமல், அதிகரித்துவரும் பணவீக்கம் வாழ்க்கையை நெரித்து கடனில் ஆழ்த்துகிறது. இதுதான் இன்றைய வளர்ந்த இந்தியாவின் யதார்த்தம். ஒருநாளைக்கு 12 மணிநேரம் வேலை பார்க்கும் தொழிலாளர், தங்களின் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை செலுத்த கடன் வாங்குகிறார், அவருடைய கோரிக்கை நியாயமற்றதா? தினந்தோறும் அவர்களது உரிமைகளைப் பறித்துக்கொண்டிருப்பவரா வளர்ச்சியைக்கொண்டு வருகிறார்?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

    ”நாட்டின் முதுகெலும்பாக உள்ள, இந்த அரசாங்கம் சுமையாக கருதும் ஒவ்வொரு தொழிலாளருடனும் நான் உடன் நிற்கிறேன்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    திங்களன்று, நொய்டாவின் சில இடங்களில் தொழிலாளர்கள் வன்முறையிலும் கல்வீச்சிலும் ஈடுபட்டதுடன், சில வாகனங்களுக்குத் தீயும் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    போராட்டம் நடத்திய ஊழியர்கள் ஊதிய உயர்வைக் கோரி வருகின்றனர்.

  14. யுரேனியம் செறிவூட்டல்: இரான் முன்மொழிவை அமெரிக்கா நிராகரித்ததாக தகவல்

    இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி

    பட மூலாதாரம், Burak Kara/Getty Images

    படக்குறிப்பு, இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி

    இரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை குறித்த ஊகங்கள் தொடர்கின்றன. இதற்கிடையில், யுரேனியம் செறிவூட்டலுக்கு ஐந்தாண்டு காலம் நிறுத்தி வக்க இரான் முன்மொழிந்துள்ளது, ஆனால் அமெரிக்கா இந்த முன்மொழிவை நிராகரித்து, 20 ஆண்டு காலத் தடையைக் கோரியுள்ளது.

    இரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

    பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, ​​அணுசக்தி நடவடிக்கைகளை நிறுத்த அமெரிக்காவும் இரானும் வெவ்வேறு முன்மொழிவுகளை வழங்கின, ஆனால் இரு தரப்பினருக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று அந்த செய்தி அறிக்கை கூறுகிறது.

    இருப்பினும், ஓர் அமைதி ஒப்பந்தத்துக்கான சாத்தியம் இன்னும் உள்ளது என்பதையும், இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்பதையும் இந்த விவாதங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

    இதுகுறித்து கருத்து கேட்பதற்காக வெள்ளை மாளிகையை பிபிசி தொடர்புகொண்டுள்ளது.

    இரானின் அணுசக்தி லட்சியங்களே இந்த சர்ச்சைக்கு ஒரு முக்கிய காரணம் என்று அமெரிக்கா நம்புகிறது.

    இரான் அணு ஆயுதங்களைப் பெறாமல் இருப்பதை அமெரிக்கா உறுதி செய்யும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார்.

  15. இரான் ‘பொருளாதார பயங்கரவாதத்தில்’ ஈடுபடுவதாக வான்ஸ் குற்றச்சாட்டு

    அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்

    பட மூலாதாரம், Jonathan Ernst-Pool/Getty Images

    படக்குறிப்பு, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்

    ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களைத் தடுப்பதன் மூலம் இரான் அரசு 'பொருளாதார பயங்கரவாதத்தில்' ஈடுபட்டு வருவதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.

    "இந்த ஆட்டத்தை இரு வழிகளிலும் விளையாட முடியும் என்பதை அதிபர் டொனால்ட் டிரம்ப் காட்டியுள்ளார்," என்று ஜே.டி. வான்ஸ் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறினார்.

    அவர் மேலும் கூறுகையில், "இரான் பொருளாதார பயங்கரவாதத்தில் ஈடுபட்டால், எந்தவொரு இரானிய கப்பலும் வெளியே செல்ல முடியாது என்ற கொள்கையின் அடிப்படையில் அமெரிக்கா செயல்படும்," என்றார்.

    இஸ்லாமாபாத்தில் இரானுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஜே.டி. வான்ஸ் கூறுகையில், "பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, இப்போது பந்து இரானின் கையில் உள்ளது," என்றார்.

    வான்ஸ் மேலும் கூறுகையில், "இரான் நெகிழ்வுத்தன்மையுடன் இருந்து, அமெரிக்காவின் அத்தியாவசிய கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டும். இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் மீது அமெரிக்கா கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். இரான் அணு ஆயுதங்களை உருவாக்க முடியாது என்பதை உறுதிசெய்யும் ஒரு கண்காணிப்பு அமைப்பும் இருக்க வேண்டும்," என்றார்.

    பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இரானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் ஜே.டி. வான்ஸ் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவை முடிவடையவில்லை, அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைப் பரிமாறிக்கொண்டன.

  16. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் இன்றைய (ஏப்ரல் 14) நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம்.

    இன்று பிற்பகல் வரையிலும் அண்மைச் செய்திகளை தொகுத்து அளிப்பவர் நந்தினி வெள்ளைச்சாமி.

  17. இந்திய கப்பல்களிடம் சுங்கம் வசூலா? - இரான் அளித்த பதில்

    ஹோர்மூஸ்

    பட மூலாதாரம், ANI

    ஹோர்மூஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் செல்வது குறித்தும், அவற்றின் மீது சுங்க வரி விதிக்கப்படுவது குறித்தும் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில், இந்தியாவிற்கான ,இரான் தூதர், இந்தியாவை இரானின் ஐந்து நட்பு நாடுகளில் ஒன்றாக வர்ணித்தார்.

    இரான் தூதர் டாக்டர் முகமது ஃபத்தாலி இதுகுறித்துத் தெரிவிக்கையில், "இந்திய அரசாங்கத்துடன் நாங்கள் நல்லுறவைப் பேணி வருகிறோம். இந்தியக் கப்பல்களுக்குத் தேவையான சிறந்த ஏற்பாடுகளைச் செய்ய நாங்கள் விரும்புகிறோம்," என்று கூறினார்.

    அவர் மேலும் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோதிக்கும் எங்கள் அதிபர் மசூத் பெசெஷ்கியானுக்கும் இடையே இரண்டு தொலைபேசி உரையாடல்களும், எங்கள் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கு இடையே நான்கு முதல் ஐந்து உரையாடல்களும் நடைபெற்றுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள்," என்றார்.

    "எங்களுக்குள் நல்ல தொடர்புகள் நிலவி வருகின்றன; ஏனெனில், எங்கள் வெளியுறவுத் துறை அமைச்சர், இரானின் நட்பு நாடுகளாகத் திகழும் ஐந்து நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் சேர்த்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.

    ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் மீது இரான் சுங்க வரியை வசூலித்து வருகிறது. அமெரிக்கா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அந்த நீரிணையை முற்றுகையிட முயன்று வருகிறது.

  18. ஹோர்மூஸ் முற்றுகை தொடங்கியது - இரானுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை

    டிரம்ப்

    பட மூலாதாரம், Donald Trump

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோஷியலில் விடுத்துள்ள பதிவு ஒன்றில், இரானின் கடற்படை முழுமையாக அழிக்கப்பட்டு, மொத்தம் 158 கப்பல்கள் கடலடியில் உள்ளன என கூறப்பட்டுள்ளது.

    மேலும், “வேகத் தாக்குதல் கப்பல்கள்” என அழைக்கப்படும் சில சிறிய கப்பல்கள் மட்டுமே தாக்கப்படாமல் உள்ளதாகவும், அவை அமெரிக்கா அறிவித்துள்ள முற்றுகை நடவடிக்கைகளுக்கு அருகில் வந்தால் உடனடியாக “அழிக்கப்படும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இரான் துறைமுகங்கள் முற்றுகையிடப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், முற்றுகை நடவடிக்கை இந்திய நேரப்படி திங்கட்கிழமை இரவு 07:30 மணி முதல் தொடங்கியது.

    இரான் துறைமுகங்களுக்குள் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் அனைத்து நாட்டுப் போர்க்கப்பல்கள் மற்றும் சரக்குக் கப்பல்களுக்கும் தடுக்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.

  19. அரை மணி நேரத்தில் அமெரிக்காவின் முற்றுகை - இரான் பதில் என்ன?

    ஹோர்மூஸ்

    பட மூலாதாரம், Shady Alassar/Anadolu via Getty

    இரான் துறைமுகங்கள் முற்றுகையிடப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், முற்றுகை நடவடிக்கை இந்திய நேரப்படி திங்கட்கிழமை இரவு 07:30 மணி முதல் தொடங்கக்கூடும்.

    இரான் துறைமுகங்களுக்குள் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் அனைத்து நாட்டுப் போர்க்கப்பல்கள் மற்றும் சரக்குக் கப்பல்களுக்கும் தடுக்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.

    டிரம்ப் மிரட்டலுக்கு பதிலளித்த இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், இரான் அச்சுறுத்தல்களுக்குப் பணியாது என்று கூறினார். மேலும், "அவர்கள் போரிட்டால், நாங்களும் போரிடுவோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையில், ஹோர்மூஸ் நீரிணையை நெருங்கும் ராணுவக் கப்பல்கள் "கடுமையாக எதிர்கொள்ளப்படும்" என்று இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

  20. ஹோர்மூஸ் முற்றுகை - அமெரிக்காவுக்கு இஸ்ரேல் ஆதரவு

    நெதன்யாகு

    பட மூலாதாரம், Reuters

    இரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை இஸ்ரேல் ஆதரிப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேல் அமைச்சரவைக்கு அனுப்பிய காணொளிச் செய்தியில், இஸ்ரேலிய பிரதமர், "அவர்களுக்கு எதிராக கடற்படை முற்றுகையை விதிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இந்த கடுமையான நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம்," என்று கூறினார்.

    இரானுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் பேசியதாகவும் அவர் கூறினார். "அனைத்து செறிவூட்டல் (அணுசக்தி) பொருட்களையும் அகற்றுவதும், மேலும் செறிவூட்டல் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதும்தான் முக்கிய விஷயம்," என்று வான்ஸ் கூறியதாக இஸ்ரேலிய பிரதமரின் காணொளிச் செய்தி தெரிவிக்கிறது.

    பாகிஸ்தானிலிருந்து திரும்பும்போது தனது விமானத்திலிருந்து வான்ஸ் தன்னை தொலைபேசியில் அழைத்து, இரானுடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்த விரிவான தகவல்களை வழங்கியதாக நெதன்யாகு கூறினார்.

    அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படுவது "முற்றிலும் பொய்யானது" என்றும் இஸ்ரேலிய பிரதமர் கூறினார்.