'மீன் குழம்பு, மொகல் கார்டன்': வாலி பற்றி பா.விஜய் பகிரும் 9 சுவாரஸ்யங்கள் மற்றும் 10 பாடல்கள்

வாலி நினைவு தினம்

பட மூலாதாரம், @sgsiyer1970/x

    • எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஸ்ரீரங்கத்தில் 1931-ல் பிறந்த கவிஞர் வாலியின் நிஜப்பெயர் ரங்கராஜன். சென்னையில் ஓவியக்கல்லுாரியில் படித்த அவர் பின்னர் மீண்டும் சொந்த ஊர் சென்று 'பத்திரிகை பணி', 'கவிதைகள் எழுதுவது', 'ஓவியங்கள் வரைவது', 'வானொலிக்கு கதைகள் மற்றும் நாடகங்கள் எழுதுவது' என சென்று கொண்டிருந்தார். பிரபல ஓவியர் மாலி போல் ஆக வேண்டும் என்ற எண்ணத்தால் தனது பெயரை வாலி என மாற்றி வைத்துகொண்டார்.

ஒரு கட்டத்தில் பாடகர் 'டி. எம். சௌந்தரராஜனால் சினிமாவிற்கு பாட்டெழுத சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். 1958ஆம் ஆண்டு "அழகர் மலைக் கள்ளன்" படத்தில் தன்னுடைய முதல் பாடலை எழுதினார். நிலவும் தாரையும் நீயம்மா... இந்த உலகம் ஒருநாள் உனதம்மா" என்ற அந்த பாடலை பாடகி சுசீலா பாடினார்.

50 ஆண்டுகளில் 15 ஆயிரம் பாடல்கள்

தொடர்ந்து 'சந்திரகாந்த்', 'இதயத்தில் நீ', 'நல்லவன் வாழ்வான்', 'எதையும் தாங்கும் இதயம்' போன்ற பல படங்களில் பாடல் எழுதினாலும் 1963 ஆம் ஆண்டு "கற்பகம்" படத்தில் அவர் எழுதிய 'மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா', 'ஆயிரம் இரவுகள் வருவதுண்டு', 'அத்தை மடி மெத்தையடி' ஹிட்டாயின.

'நான் சாப்பிட வழியில்லாமல் இருந்தேன். பின்னர் சாப்பிடவே நேரம் இல்லாமல் இருந்தேன்' என்று வாலியே சொல்லும் அளவுக்கு பிரபலம் ஆனார். எம்ஜிஆர் தொடங்கி சிவகார்த்திகேயன் வரைக்கும் பாடல் அவர் எழுதியுள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதனில் ஆரம்பித்து அனிருத் வரை பல இசையமைப்பாளர்களுடன் அவர் பணியாற்றினார்.

50 ஆண்டுகளில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல் எழுதிய அவர் 2013-ஆம் ஆண்டு சென்னையில் தனது 82வது வயதில் காலமானார். இன்று கவிஞர் வாலியின் நினைவு தினம். வாலியால் தனது வாரிசு என அறிவிக்கப்பட்ட கவிஞர் பா.விஜயிடம் வாலி நினைவலைகள் குறித்து பிபிசி சார்பில் பேசினோம். இனி அவரது வரிகளில் வாலி.

வாலி நினைவு தினம்
படக்குறிப்பு, கவிஞர் பா.விஜய்

"தேவிகா, ராதிகா, ஜோதிகா"

சின்ன வயதில் இருந்து வாலியின் வரிகளை ரசித்து வளர்ந்தவன். ஒரு ஆல்இந்தியா கவியரங்கம் மூலமாகதான் அவருடன் நான் ரொம்ப நெருக்கமானேன். அதில் அவர் நடுவராக இருந்தார். நான் பேசும்போது நடிகை தேவிகா காலத்திலும் நீங்க பாடல்களில் மின்னியவர், ராதிகா காலத்திலும் அதை தொடர்ந்தவர், ஜோதிகா காலத்திலும் பாட்டு எடுத்து பின்னுபவர் என்றேன். அதை அவரும் ரசித்தார். அரங்கிலும் நல்ல கை தட்டல்.

பொதுவாக கவியரங்கம் நட்பு பெரிதாக தொடராது. ஆனால், மறுநாள் எனக்கு அவரே போன் பண்ணினார். "நான் சொன்னதை சுட்டிக்காட்டி நீ சாதாரணமாக பேசலை. அந்த பேச்சில் என்னை 3 தலைமுறையுடன் தொடர்பு படுத்திவிட்டாய். பிரமாதம், சபாஷ்" என பாராட்டினார். அவ்வளவு பெரிய கவிஞர் நம்மை போனில் அழைத்து பேசுகிறாரே என்று மிரண்டுபோய் அவருடன் அடிக்கடி பேச ஆரம்பித்தேன்.

சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் கற்பகம் அவின்யூவில் இருக்கும் அவர் வீட்டுக்கு சில நாட்களில் அழைத்தார். அங்கே போய் பேச, பழக ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்த நட்பு, பேச்சு தொடர்ந்தது. சுருக்கமாக சொன்னால் ஒரு கட்டத்தில் என்னை தன்னுடைய மகன் மாதிரி பார்க்க ஆரம்பித்தார்.

வாலியின் வார்த்தை மட்டுமல்ல, பேச்சும் சுவாரஸ்யம்

வாலியின் வார்த்தைகள் மட்டுமல்ல, பேச்சும் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். அவருடைய பேச்சில் காமெடி, வார்த்தை விளையாட்டு அதிகமாக இருக்கும். அவரை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். அவர்களை சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார்.

எனக்கு மனச்சோர்வு, டென்ஷன் ஏற்பட்டால் வாலி வீட்டுக்கு சென்றுவிடுவேன். சில மணி நேரம் இருப்பேன். அவர் வரும்போது உற்சாகமாகிவிடுவேன். பலமுறை அவர் தன்னுடன் சாப்பிட அழைப்பார். வயது வித்தியாசம் உள்பட வேறு வகையில் அவர் பாகுபாடு பார்க்கமாட்டார். என் வீட்டுக்கு அடிக்கடி வந்து இருக்கிறார். என் குழந்தைகளை கொஞ்சி இருக்கிறார். என்னிடம் கோபப்பட்டதே இல்லை.

மீன் குழம்பு காமெடி

பலருக்கும் தெரியாத விஷயம், கவிஞர் வைதீகமானவராக தெரிந்தாலும் நன்றாக அசைவம் சாப்பிடுவார். அவருக்கு மீன்குழம்பு ரொம்ப பிடிக்கும் என தெரிந்துகொண்டு, ஒரு கட்டத்தில் நானும் வீட்டில் மீன் குழம்பு சமைத்து அவருக்கு கொண்டு செல்வேன். மறுக்காமல் வாங்கி ருசிப்பார். 'நான் சுறாமீன் சாப்பிடும் பிராமின்' என சிரிப்பார். நான் போகாவிட்டாலும் என் வீட்டில் மீன் வறுவல், மீன் குழம்பை கொடுத்து அனுப்புவேன்.

நான் ஒருமுறை மீன் குழம்பை அதிகமாக, மீன் துண்டை குறைவாக கொடுத்து அனுப்பினேன். அன்று மாலை போன் செய்தார். மீன் குழம்பு பற்றி கேட்டேன். குழம்பு அருமை. ஆனால், துாண்டில் போட்டு பிடிக்கும் அளவுக்கு மீன் குறைவாக இருந்தது என்றார். அதை நான் வெகுவாக ரசித்தேன்.

எம்ஜிஆருக்கு பிறகு நீதான்

நான் சென்னை ராமாபுரத்தில் வீடு கட்டி குடிபுகுந்தேன். அவரை அழைத்தேன், வந்தவுடன் 'எம்ஜிஆருக்கு பிறகு என்னை ராமாபுரம் அழைத்தவன் நீதான்' என்றார். 'புதிதாக படி இருந்ததால் அய்யா பார்த்து வாங்க' என்றேன். 'இந்த வாலி யார் வீட்டு படியிலும் விழமாட்டான். யார் மடியிலும் விழமாட்டான்' என ரைமிங்காக பேசி அசத்தினார்.

நானும் அவரும் டெல்லிக்கு போனதை மறக்கவே முடியாது. அவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தபோது என்னையும் அழைத்தார். நான் அவரை அழைத்து சென்றேன். தாஜ் ஓட்டலில் தங்கினோம். அவர் தனது அறையில் தங்க சொன்னார். அந்த சில நாட்கள் அவர் ஜோக்கால் வயிறு வலிக்க சிரித்தோம். நானும் கவிஞர் கண்ணதாசனும் நிறைய பேசுவோம் என்றார் அவர்.

டெல்லியில் சாமியார் ஆனார்

டெல்லி சென்றபோது லோட்டஸ் கோயில் சென்றோம். அவரை உட்கார வைத்துவிட்டு தண்ணீர் வாங்க சென்றேன். சற்று நேரத்தில் அவரை சுற்றி கூட்டம், நான் பதறிவிட்டேன். பக்கத்தில் போய் பார்த்தால் அவர் கெட்அப் பார்த்து பலரும் அவரை பிரபலமான சாமியார் என நினைத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். அதையும் அவர் விளையாட்டாக ரசித்து ஆசி கொடுத்தார்.

அடுத்து அப்போது குடியரசுத் தலைவராக இருந்த அப்துல்கலாமை சந்தித்தோம். மொகல் கார்டனில் இருவரும் ஜாலியாக பேசியபடி சுற்றினர், அதை நான் ரசித்தேன். குடியரசுத் தலைவர் அவரை விரும்பி அழைத்து சென்றார். எத்தனையோ பயணங்கள் சென்றாலும் அவருடன் சென்ற டெல்லி பயணத்தை மறக்கவே முடியாது

வாலி நினைவு தினம்

நாலரை மணிக்கு பாடல் எழுதுவார்

வாலிக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. காலையில் நாலரை மணிக்கு எழுந்துவிடுவார். அவருக்கான பாடலை அந்த அமைதியான நேரத்தில் எழுதிவிடுவார். அதை டைரியில் குறித்துக்கொண்டு மீண்டும் 6 மணிக்கு துாங்கி, 9 மணிக்கு மேல் எழுவார்.

என்னாச்சு என விசாரித்தால் 'எஸ்.ஜே.சூர்யா வந்தார். எழுதிகொடுத்தேன். காலையில் எழுதுவது நமக்கு செட்டாகிவிட்டது' என்பார். மாடியில் அவர் அறைக்கு செல்லக்கூடிய பாக்கியம் எனக்கு அடிக்கடி கிடைத்தது. ஒருமுறை அவர் கட்டிலுக்கு அடியில் 200க்கும் அதிகமான புத்தகங்களை, அதை படித்துவிட்டு மடித்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்தேன். அவர் டேபிளிலும் புத்தகங்கள் குவிந்து இருக்கும்.

கருணாநிதி கேட்ட கேள்வி

வாலி ஆயிரக்கணக்கில் பாடல் எழுதினாலும் , என் பாடல்களையும் பேசியிருக்கிறார். நான் எழுதிய ஒவ்வொரு பூக்களுமே பாடல் வரிகளில் இலக்கண பிழை என சர்ச்சை எழுந்தபோது எனக்காக பேசினார். ஒரு கவியரங்கில் இது சரியா என கருணாநிதி கேட்க, 'ஆயிரம் நிலவே சரி என்றால், ஒவ்வொரு பூக்களும் சரிதான்' என்றார் வாலி. அதைக் கேட்டு கலைஞரும் சிரித்தார்.

என் பாடல்களை அவர் ரசிப்பார். ஒரு பாடல் வெளியீட்டு விழாவில் ''இப்ப பிலிம் இல்லாமல் கூட படம் எடுக்கலாம். ஆனால், பா.விஜய் பாடல் இல்லாமல் படம் எடுக்க முடியாது" என்ற பெரிய வார்த்தையை சொன்னார். தனது கடைசி பாடலை ஆஸ்பத்திரியில் இருந்து எழுதினார். அந்த படத்தின் இயக்குநர் பெயர் இப்ராகிம். அவருக்கு முதலில் சான்ஸ் கொடுத்தவரும் இப்ராஹிம். இரண்டு பாடல்களும் அம்மா பற்றி பாடல் என்று அவர் சொல்லி நான் தெரிந்துகொண்டேன்.

எம்ஜிஆர் அழைத்தார், வாலி மறுத்தார்

எம்ஜிஆர் குறித்து நிறைய என்னிடம் பேசியிருக்கிறார். பல சம்பவங்களை சொல்லியிருக்கிறார். ஒருமுறை எம்ஜிஆர் அவர் வீட்டுக்கு வந்து அவர் மனைவி கையால் சாப்பிட்டுவிட்டு, 'வாலி உங்களுக்கு நான் பெரிதாக எதுவும் செய்யவி்ல்லை. நீங்க படம் தயாரிங்க. நான் கால்ஷீட் கொடுக்கிறேன் என சொல்ல, வாலி அதை மறுத்துவிட்டாராம்.

அது பற்றி அவர் ''நான் அவரால் வளர்ந்தேன். அதனால், அவர் உதவியை மறுத்துவிட்டேன். நான் என் பாடலால், திறமையால் நன்றாக சம்பாதித்தேன். அந்த நிறைவு போதும். அதனால் எம்ஜிஆர் வேண்டுகோளை கடுமையாக மறுத்துவிட்டேன் 'என்றார். இவர் எம்ஜிஆர், கலைஞருடன் சின்ன வயதில் சாப்பிட்டது, பழகியது, ஜோக் அடித்தது குறித்து அவர் நிறைய பேசியிருக்கிறார்.

வாலி நினைவு தினம்

கண்ணதாசனுடன் நட்பு

தனது போட்டியாளரான கண்ணதாசன் குறித்து உயர்வாக, மகிழ்ச்சியாக பேசியிருக்கிறார். அவருக்கு நான் எதிர் கடைபோட்டாலும், எதிரியாக பார்க்காதவர் என புகழ்ந்து சொல்லியிருக்கிறார். பொதுவாக அவர்களுக்கு இடையில் நல்ல நட்பு, ஏகப்பட்ட பார்ட்டி, சந்தோஷ மீட்டிங் இருந்ததை நான் புரிந்துகொண்டேன். அது வாலி, மற்றும் கண்ணதாசன் நட்பின் சிறப்பு.

50 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்சினிமாவில் சாதனை படைத்து இருந்தாலும், தனது இஷ்டதெய்வமான முருகன் பற்றி அவர் வாழ்க்கையை கவிதை வடிவில் எழுத ஆசைப்பட்டார். முருகாற்றுப்படையை கவிதை வடிவில் சொல்ல நினைத்தார். அது நடக்கவில்லை. நான் அதை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

வாலி எழுத்தில் எனக்கு பிடித்த 10 பாடல்கள்

  • மறுபடியும் படத்தில் எஸ்பிபி பாடிய 'நலம் வாழ எந்நாளும் வாழ்த்துகள்'
  • ஆசையில் அழகாக வந்த 'கொஞ்சநாள் பொறு தலைவா, ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா'
  • தீர்க்க சுமங்கலி படத்தில் வாணி ஜெயராம் தேன்குரலில் வந்த 'மல்லிகை என் மன்னன் மயங்கும்'
  • குழந்தையும் தெய்வமும் படத்தில் ஒலித்த 'அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்'
  • எம்ஜிஆரின் உரிமைக்குரல் படத்திற்காக வாலி எழுதிய 'விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே'
  • காதலர் தினம் படத்தில் உன்னிமேனன் பாடிய 'என்ன விலை அழகே'
  • குணா படத்தில் இடம் பெற்ற 'கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே'
  • எதிர்நீச்சல் படத்தில் அனிருத் இசையில் எழுதிய 'மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே''
  • புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இளையராஜா இசையில் பிரபலமான 'கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே'
  • இதயம் படத்தில் ஜேசுதாஸ் காந்த குரலில் பாடிய 'பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா'

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு